Published : 04 Apr 2016 08:05 AM
Last Updated : 04 Apr 2016 08:05 AM

ஓய்வுபெற்ற நீதிபதியை கவுரவித்த முன்னாள் சக வகுப்பு மாணவர்கள்: ஓய்விலும் சாதிக்கும் 46 ஆண்டு கால நட்பு

உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற டி.ஹரிபரந்தாமனை, அவருடன் 10-ம் வகுப்பில் படித்த மாணவர்கள் பாராட்டி கவுரவித்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றவர் டி.ஹரிபரந்தாமன். இவர் சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள குருசுவாமி முதலியார் தொண்டை மண்டல துளுவ வேளாளர் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். டி.ஹரிபரந்தாமன் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், அவருடன் 10-ம் வகுப்பு படித்த 1969-70 பேட்ச் மாணவர்கள் அவரை பாராட்டி கவுரவித்துள்ளனர்.

குருசுவாமி முதலியார் தொண்டை மண்டல துளுவ வேளாளர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த விழா நடந்தது. நீதிபதி டி.ஹரிபரந்தாமனுடன் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களான சி.லட்சுமிநரசிம்மன், டாக்டர் அன்புச்செல்வன், டாக்டர் துரைராஜ், ஏ.கதிர்வேல், ராமலிங்கம், கே.வி.விஜயன், அரசு வழக்கறிஞர் தூயமணி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜா நாராயணன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிச் செயலாளர் ராம்விஸ்வநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, நீதிபதிக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஏற்புரை வழங்கிய நீதிபதி டி.ஹரிபரந்தாமன் பேசியதாவது:

நான் படித்த இந்த பள்ளி நிர்வாகமும், என்னுடன் படித்த நண்பர்களும் என்னை மறக்காமல் அழைத்து பாராட்டி கவுரவித்திருப்பது வாழ்வில் மறக்க முடியாத தருணம். நம் வகுப்புத்தோழர்கள் கண்டிப்பாக ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்க உதவ வேண்டும். இப்பள்ளியில் 2-வது மாடி கட்ட நிதியுதவி தேவை என்றார்கள். அதற்கு நான் எனது பங்களிப்பாக ரூ.1 லட்சம் தருகிறேன். இதேபோல் மற்றவர்களும் உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவுக்கு ஏற்பாடு செய்த முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவரான சி.லட்சுமிநரசிம்மன் இதுபற்றி கூறும்போது, “எங்கள் பேட்ச் மாணவர்கள் எல்லோருமே பணியில் ஓய்வு பெற்றவர்கள். ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை, அவருடன் படித்த பழைய மாணவர்கள் இத்தனை ஆண்டுகள் கழித்து ஒன்றாக கூடி கவுரவிப்பது அரிது. அதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம். எங்களுடன் படித்த மற்றவர்களும் வழக்கறிஞர்களாக, போலீஸ் அதிகாரிகளாக, மருத்துவர்களாக, தொழிலதிபர்களாக நல்ல நிலையில் உள்ளனர். நாங்கள் அனைவரும் மாலை வேளைகளில் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு சேவை செய்து வருகிறோம். வெள்ளம் ஏற்பட்டபோது எங்கள் சங்கம், இளைஞர்களோடு கைகோர்த்து சிறப்பாக செயல்பட்டுள்ளது. இப்போது முழுநேரப் பணியாக இளைஞர்களை ஒருங்கிணைத்து மக்கள் அதிகம் வந்து செல்லும் மெரினா பீச் உள்ளிட்ட பகுதிகளில் குற்றங்கள் நிகழாமல் தடுத்து வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x