Published : 29 Jan 2022 08:19 AM
Last Updated : 29 Jan 2022 08:19 AM

ஓபிஎஸ், ரவீந்திரநாத் மீதான வழக்கு: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

சென்னை: வேட்புமனுவில் தவறான தகவல் அளித்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரதுமகன் ரவீந்திரநாத் எம்பி ஆகியோர்மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது போடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர், தங்களின் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்தும், தவறான தகவல்களையும் தெரிவித்துள்ளதாகவும் கூறி, அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி தேனி எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்பி ரவீந்திரநாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வரும் பிப்.7 அன்று அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்தது. இந்த வழக்கில் போலீஸார் சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்.1-க்கு தள்ளி வைத்துள்ளார். அதுவரை தேனி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத்தடை விதித்து நீதிபதி எம்.நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x