Published : 26 Jan 2022 06:08 AM
Last Updated : 26 Jan 2022 06:08 AM

தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம் தொடக்கம் - ‘ஆராய்ச்சியில் சிறந்த தமிழகம்’ என்ற இலக்கை நோக்கி பயணிப்போம்: உயர்கல்வி நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகத்தை கிண்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, அவற்றின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.படங்கள்: பு.க.பிரவீன்

சென்னை: ‘ஆராய்ச்சியில் சிறந்த தமிழகம்’ என்ற இலக்கை நோக்கி உயர்கல்வி நிறுவனங்கள் பயணிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தில் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) பேரிடர் மேலாண்மை, விவசாயம், வரி திட்டமிடல், கட்டுமானக் கண்காணிப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறுதேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய் துள்ளது.

இதற்காக, அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து ரூ.10 கோடி மதிப்பீட்டில் ‘தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம்’ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் சூரியசக்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றின் தொடக்கவிழா உயர்கல்வித் துறை சார்பில், சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகக் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, உயர்கல்வித் துறையில் பணியாற்றி உயிரிழந்தவர்களின் 36 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனக் குழுமத்தின் நிதியுதவியுடன்மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடியில் சூரிய சக்தி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நாளுக்குநாள் மின்தேவை அதிகமாகி வருகிறது. அதைப் பூர்த்திசெய்ய சூரிய ஆற்றலைப் பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது. எனவே, காமராஜர் பல்கலை. போல அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி கல்லூரியில் ஏரோநாட்டிகல் துறை சார்பில் பல்வேறுஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ட்ரோன் என்ற சிறிய ரக விமானத்தையும் வடிவமைத்துள்ளனர். இதற்கு காரணமான ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டுக்கள். அரசின் நிதியுதவியால் இந்த ஆராய்ச்சி மையம் பல்வேறு ட்ரோன்களைத் தயாரித்து வழங்கி வருகிறது. முதலில் இது காவல்துறையில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் வான்வழியில் புகைப்படம் எடுக்கவும், பேரிடர் மேலாண்மைக்கும் பயன்படுத்தப்படுகிறது.

ட்ரோன்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அனைத்து பல்கலை.களும் வெறுமனே பட்டம் வழங்கும் மையங்களாக இல்லாமல் ஆராய்ச்சி நிறுவனங்களாக மாறவேண்டும். பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்து சமூகத்துக்கு அர்ப்பணிக்க வேண்டும். தமிழகத்தில்தான் ஆற்றல்மிக்க இளைஞர் சக்தி அதிகமுள்ளது. மேலும், மற்ற மாநிலங்களைவிட அதிகளவில் பள்ளி, கல்லூரிகள் தமிழகத்தில்தான் உள்ளன.

அதற்கேற்ப ஆய்வுகள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் இன்னும்அதிகமாக வேண்டும். வெளிநாடுகளில் இருக்கும் புதிய படிப்புகளைநமது கல்லூரிகளில் புகுத்த வேண்டும். உயர்கல்வித் துறை நிபுணர்கள் கலந்துரையாடி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

கல்வியில் சிறந்த தமிழகம் என்றநிலையைத் தாண்டி, ‘ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த மாநிலம்’ என்றபட்டத்தை நாம் பெற்றாக வேண்டும். அதைநோக்கி உயர்கல்வி நிறுவனங்கள் பயணிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பேசும்போது, ‘‘ட்ரோன் தொழில்நுட்பத்தின் பயன்கள் விவசாயிகள் உட்பட அனைத்துதரப்பு மக்களையும் சென்றடையவே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை. உதவியுடன் இந்த நிறுவனம் நிச்சயம் சிறப்பாகச் செயல்படும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பல்கலை. வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா விமானக் கழகத்தின் கண்காட்சியை முதல்வர்பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். பல்வேறு வகையான ட்ரோன்களின் அணிவகுப்பு மற்றும் செயல் விளக்கமும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன், தொழில்நுட்பக்கல்வி இயக்குநர் க.லட்சுமிபிரியா, அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிமயில்சாமி அண்ணாதுரை, பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x