Published : 21 Apr 2016 09:21 AM
Last Updated : 21 Apr 2016 09:21 AM

ஏப்.25, 29-ல் அதிகளவில் வேட்புமனு தாக்கல்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறும் ஒரு வாரமும் தேய்பிறை நாட்களில் வருகிறது. இதனால், பஞ்சமி நாளான வரும் 25-ம் தேதியும், முகூர்த்த நாளான 29-ம் தேதியும் அதிக அளவில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. திராவிடக் கட்சிகளின் வேட்பாளர்கள்கூட நல்ல நாள், நல்ல நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக 234 தொகுதியிலும் அதிமுக வேட்பாளர்கள் ஒரே நாளில் தேர்தல் அலுவலகம் திறந்து பிரச்சாரத்தை தொடங்கியதுபோல், வேட்புமனு தாக்கலும் ஒரே நாளில்தான் மேற்கொள்வர்.

இன்று சித்திரை பவுர்ணமி. இதன்பிறகு 15 நாட்களுக்கு தேய்பிறை என்பதால் வேட்பாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். இதுகுறித்து திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி முதுநிலை ஆசிரியரும், ஜோதிடருமான க.பெருமாள் கூறும்போது, ‘‘தேய்பிறை என்றாலும், 22 முதல் 29-ம் தேதிக்குள் 2 முகூர்த்த நாட்கள் வருகின்றன. 25-ம் தேதி பஞ்சமியும், சங்கடஹர சதுர்த்தியும் இணைந்த சுபமுகூர்த்தம். 29-ம் தேதி திருவோண நட்சத்திரம் கூடிய சுபமுகூர்த்த நாள். இவை இரண்டும் சிறந்த நாட்கள்” என்றார். இதன்படி, 25 மற்றும் 29-ம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் அதிகம் நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 25-ம் தேதி கோவில்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்கிறார். இதற்காக கோவை மாவட்டத்தில் தனது பிரச்சார பயணத்தை மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x