Published : 22 Jan 2022 09:07 PM
Last Updated : 22 Jan 2022 09:07 PM

தேசிய கலைத் திருவிழாவில் தமிழகம் முதலிடம்: வாய்ப்பாட்டுப் போட்டியில் சென்னை மாணவர் எல்.முகுந்த் சாதனை

மயிலாப்பூர் பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் எல்.முகுந்த் பரத்வாஜ்.

சென்னை: தேசிய அளவிலான கலைத் திருவிழாவில் மயிலாப்பூர் பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் எல்.முகுந்த் பரத்வாஜ் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

'கலா உத்ஸவ்' என்பது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில், மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மத்தியில் கலையை வளர்க்கும் வகையில் நடத்தப்படும் கலைத் திருவிழா ஆகும்.

இந்தத் திருவிழாவில் நாடு முழுவதுமிருந்து 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு கலைப் பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. பிரம்மாண்டமாக நடைபெற்ற இப்போட்டியில் முகுந்த் பரத்வாஜ், வாய்ப்பாட்டுப் பிரிவில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

முன்னதாக பள்ளி அளவிலும் மாவட்ட அளவிலும் நடத்தப்பட்ட போட்டியில் அவர் வெற்றி பெற்றார். தொடர்ந்து அனைத்திந்திய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று, அதில் இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

அவருக்கு விரைவில் வெற்றிக் கோப்பையும் அத்துடன் பாராட்டுச் சான்றிதழும், ரூ.20,000 ரொக்கப் பரிசும் அளிக்கப்படும்.

தனது வெற்றி குறித்து முகுந்த் அளித்தப் பேட்டியில், "கரோனா பெருந்தொற்று காரணமாக இந்தப் போட்டி இணையவழியில் நடத்தப்பட்டது. நான் லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் பாட்டுப்பாட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த நடுவர்கள் அதனைக் கேட்டு தீர்ப்பு வழங்கினர். தியாகராஜரின் சம்போ மஹாதேவ் பாடலை நான் பாடினேன். எனது பாட்டுக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது" என்றார்.
முகுந்த் கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடக இசை கற்றுக்கொண்டு வருகிறார். அவரது குரு சி.ஆர்.வைத்தியநாதன். தொடர்ந்து சபாக்களில் கர்நாடக இசைக் கச்சேரிகளில் பங்கேற்பேன் எனக் கூறும் முகுந்தின் லட்சியம் விமானியாக வேண்டும் என்பதே.

எல்.முகுந்த் பரத்வாஜ்

தமிழகத்தில் 7 மாணவர்கள் வெற்றி: இந்த கலைத் திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எல்.முகுந்த் பரத்வாஜ், இரண்டாம் பரிசு, வாய்ப்பாட்டு. பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி, சென்னை. எஸ்.என்.யாழினி, மூன்றாம் பரிசு, வாய்ப்பாட்டு. மகிரிஷி இன்டர்நேஷனல் பள்ளி, காஞ்சிபுரம். ஆர்.மாதவி, மூன்றாம் பரிசு, இசைக்கருவி வாசித்தல், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, போரூர், சென்னை. எம்.சக்தி பூரணி, நாட்டுப்புற நடனம், இரண்டாம் பரிசு, செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செங்குன்றம், திருவள்ளூர், பி.பி.தரணீஷ், மூன்றாம் பரிசு, நாட்டுப்புற நடனம், பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி, திருச்சி, இ.சரண்யா, மூன்றாம் பரிசு, பாரம்பரிய பொம்மைகள் செய்தல், என்.ஏ.அன்னப்பாஅ ராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம், ஆர்.சரண், மூன்றாம் பரிசி, பாரம்பரிய பொம்மைகள் செய்தல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.

தமிழகம் முதலிடம்: இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய கலைத் திருவிழாவில் தமிழகம் 7 பரிசுகளை வெறு முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. 5 பரிசுகளை வென்று பிஹார் இரண்டாம் இடத்தையும், 4 பரிசுகளை வென்று திரிபுரா, புது டெல்லி மாநிலங்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x