Last Updated : 18 Jan, 2022 07:58 AM

 

Published : 18 Jan 2022 07:58 AM
Last Updated : 18 Jan 2022 07:58 AM

ஆவடி, திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையங்களின் எல்லைக்குள் கடந்த ஆண்டில் ரயில்களில் அடிபட்டு 107 பேர் உயிரிழப்பு: தொடர் விழிப்புணர்வு நிகழ்வுகளால் ரயில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைகிறது

திருவள்ளூர்: ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையங்களின் எல்லைக்குள் கடந்த 2021-ம்ஆண்டில் ரயில்களில் அடிபட்டு 107 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், தொடர் விழிப்புணர்வு நிகழ்வுகளால் ரயில்களில் அடிபட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ரயில்வே போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் உள்ள, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட ரயில் நிலைய பகுதிகளில் நடக்கும் குற்றச்செயல்கள், விபத்துகள் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளை சென்னை - பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய ரயில்வே காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.

இந்த காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் கணிசமானவை ரயில்களில் அடிபட்டு நடக்கும் உயிரிழப்பு சம்பவங்கள்தான்.

இந்நிலையில், ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையங்களின் எல்லைக்குள் கடந்த ஆண்டில் ரயில்களில் அடிபட்டு 107 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட (கரோனா காலங்களை தவிர) படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு காரணம் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம்தான் என்று ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து, ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததாவது:

சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில், அம்பத்தூர் ரயில் நிலையம் முதல், பட்டாபிராம் இ-டிப்போ வரை உள்ள சுமார் 15 கிமீ தூர பகுதிகள் ஆவடி ரயில்வே காவல் நிலைய போலீஸாரின் எல்லைக்குள் உள்ளன. அதே போல், நெமிலிச்சேரி ரயில் நிலையம் முதல், கடம்பத்தூர் ரயில் நிலையம் வரை உள்ள 21 கிமீ தூர பகுதிகள், திருவள்ளூர் ரயில்வே காவல் நிலைய போலீஸாரின் எல்லைக்குள் உள்ளன.இவ்விரு காவல் நிலைய எல்லைக்குள், அம்பத்தூர், பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர் உள்ளிட்ட 16 ரயில் நிலையங்கள் உள்ளன.

ஆவடி, திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையங்களின் எல்லைகளில் தண்டவாளத்தை கவனக் குறைவோடு கடப்பது போன்ற செயல்களால் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஆவடி ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2021-ம் ஆண்டு ரயில்களில் அடிபட்டு 53 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கவனக் குறைவோடு தண்டவாளத்தைக் கடந்ததால் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகளில், 43 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல், திருவள்ளூர் ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டில் ரயிலில் அடிபட்டு 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 44 ஆண்கள், 5 பெண்கள் கவனக் குறைவாலும், ஓர் ஆண், 3 பெண்கள் ரயில்களில் இருந்து தவறி விழுந்தும், ஓர் ஆண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட சுமார் 50 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் எல்லைகளில் உள்ள ரயில் நிலையங்களில் வாரம்தோறும் ரயில் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும், பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் வருகிறோம்.

இதன் காரணமாக ஆவடி, திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையங்களின் எல்லைக்குள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த எண்ணிக்கை, வரும் ஆண்டுகளில் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x