Published : 12 Jan 2022 07:41 AM
Last Updated : 12 Jan 2022 07:41 AM

பழநியில் இன்று தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்: பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை

திண்டுக்கல்: பழநி தைப்பூசத் திருவிழா கொடியேற்றம், தேரோட்டம் ஆகியவற்றில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் கூறியது: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழா ஜன.21-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

பழநி மலைக்கோயில் மற்றும் இதன் உப கோயில்களில் ஜன.14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இன்று நடைபெறும் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி கோயில் நிர்வாகம் மூலம் நடத்தப்படும்.

திருவிழா நடைபெறும் 10 நாட்களிலும் மண்டகப்படிதாரர்களுக்கு அனுமதியில்லை. கோயில் நிர்வாகம் சார்பிலேயே அனைத்து மண்டகப்படிகளும் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான ஜன.17-ம் தேதி திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம், ஜன.18-ம் தேதி தைப்பூசத்தன்று நடைபெறும் தேரோட்டம் ஆகியவற்றுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஜன.18-ம் தேதி மாலை 4.45 மணிக்கு சிறிய மரத்தேரில் கோயில் பணியாளர்களைக் கொண்டு தேரோட்டம் நடைபெறும்.

திருவிழா நிறைவாக ஜன.21-ம்தேதி நடைபெறும் தெப்ப உற்சவத்திலும் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தைப்பூசத் திருவிழா நிகழ்ச்சிகள் யூ டியூப்சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x