Published : 11 Jan 2022 07:12 AM
Last Updated : 11 Jan 2022 07:12 AM

அதிமுக உள்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை: வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், அதிமுக பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிக்கான தேர்தலை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது.

அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குபிறகு தற்காலிக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டு அதன்படி முன்னாள் முதல்வர்களான ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவில் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தலை நடத்தகோரியும், இதுதொடர்பாக சசிகலாவுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்குஉத்தரவிடக்கோரியும் கடந்த 2017-ம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த நல்ல பெருமாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிமுன்பு இந்த வழக்கு விசாரணைநடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கோவிந்தராஜூவும், தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலனும், அதிமுக தரப்பில் வழக்கறிஞர் சி.திருமாறனும் ஆஜராகினர்.

அனைத்து தரப்பு வாதங்களைகேட்ட நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது: அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு, அப்பதவிகளுக்கு ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த சூழலில் அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்பதால், மனுதாரரின் கோரிக்கை விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x