Published : 10 Jan 2022 06:18 AM
Last Updated : 10 Jan 2022 06:18 AM

ஜன.12 முதல் முதுநிலை மருத்துவ கலந்தாய்வு: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 12-ம்தேதி தொடங்குவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலைபல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., டிப்ளமா படிப்புகளுக்கு தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு கடந்த நவ.11-ம் தேதி ஆன்லைனில் தேர்வு நடைபெற்றது. கடந்த செப்.28-ல் தேர்வு முடிவு வெளியானது.

எம்.டி., எம்.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வழக்கமாக ஏப்ரலில் தொடங்கிவிடும். கடந்த ஆண்டு கரோனா பரவலால் தாமதமாக நடந்த நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான இடஒதுக்கீடு மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு ஆகிய காரணத்தால் கடந்த அக்டோபர் மாதத்திலும் கலந்தாய்வை தொடங்க முடியாமல் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை விரைவாக நடத்துமாறு தமிழகம் உட்பட நாடு முழுவதும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், 27 சதவீத ஓபிசி இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 7-ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தனது ட்விட்டர் பதிவில், ‘இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 12-ம் தேதி தொடங்கும்’ என தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமைஇயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) www.mcc.nic.in என்ற இணையதளத்தில் நடத்தப்படும்.

அகில இந்திய ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு தொடங்கிய பின்னர், எஞ்சிய 50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வை நடத்த உள்ளது. இதே நடைமுறையை பின்பற்றி பல் மருத்துவப் பட்டமேற்படிப்பான எம்டிஎஸ்இடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கஉள்ளது.

கலந்தாய்வை விரைவாக நடத்துமாறு நாடு முழுவதும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x