Published : 05 Jan 2022 07:43 PM
Last Updated : 05 Jan 2022 07:43 PM

திறப்புவிழா காணும் முன்பே விரிசல்விட்ட வைகை ஆறு நான்கு வழிச்சாலை: சமூக வலைதளங்களில் வலம் வரும் மீம்ஸ்

மதுரை: மதுரையில் வைகை ஆற்றங்கரையோரத்தில் அமைக்கப்படும் நான்குவழிச்சாலைகள் திறப்பு விழா கண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் முன்பே விரிசல் விட்டுள்ளது. இந்தச் சாலையின் அவலங்கள் சமூக வலைதளங்களில் ‘மீம்ஸ்’களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக வைகை ஆற்றில் விளாங்குடி முதல் விரகனூர் வரை 12 கி.மீ., தொலைவிற்குள் ஆற்றின் இரு புறமும் பிரம்மாண்டமான நான்குவழிச் சாலைகள் போடப்படுகின்றன. இதில், நகர்ப்பகுதியில் ராஜா மில் பகுதியில் இருந்து குருவிக்காரன்சாலை வரை 3 கி.மீ., தொலைவிற்கு மாநகராட்சியும், மீதி 9 கி.மீ., தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையும் இந்த நான்கு வழிச்சாலை சாலையை அமைக்கின்றன.

மாநகராட்சி நிர்வாகம் 3 கி.மீ., தொலைவிற்கு அமைக்கும் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலை உள்பட பூங்காக்கள், தடுப்புச் சுவர் மற்றும் தடுப்பணைகள் உள்பட ரூ.84 கோடியில் திட்டம் நடக்கிறது. அதுபோல், தேசிய நெடுஞ்சாலைத்துறை ரூ.300 கோடியில் 9 கி.மீ., தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கிறது.

இந்த சாலைகள், ஆங்காங்கே தொடர்ச்சியாக இல்லாமல் பாதியிலேயே நிற்கின்றன. நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வைகை ஆற்றின் ஒரு புற சாலையில் செல்லும் வாகனங்கள் நகர்ப் பகுதயில் வராமலேயே செல்லவும், ஒரு சாலையில் செல்லும் வாகனம் மற்றொரு சாலைக்கு செல்லும் வகையிலேயே இந்த நான்கு வழிச்சாலை வடிவமைக்கப்பட்டது.

ஆனால், வைகை ஆற்றங்கரையோரம் ஆங்காங்கே தனியார் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் அவற்றை அகற்றுவதில் நீடிக்கும் தாமதமே இந்த சாலையை தொடர்ச்சியாகப் போட முடியாததிற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இந்த சாலைகளை தொடர்ச்சியாக போட வாய்ப்பே இல்லை.

இந்நிலையில் இந்த சாலைகள் போட்டு முடித்து திறப்பு விழா காணும் முன்பே சேதமடையத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே கடந்த சில மாதம் முன், பாதாளசாக்கடைப் பணிக்காக மாநகராட்சி இந்த சாலைகளில் வழிநெடுக குழிகளைத் தோண்டி சாலைகளை அலங்கோலப்படுத்தினர்.

தற்போது சாலைகள் விரிசல் விட ஆரம்பித்துள்ளன. இன்னும் திறப்பு விழா காணாமலேயே மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பல இடங்களில் இந்த சாலை விரிசல் விட்டு பாழாகிப்போய் உள்ளது. இதை மதுரை மக்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்கில் போட்டு திறப்பு விழா காணும் முன்பே பாழாகிப்போன வைகை ஆறு சாலை என்று மீம்ஸ்கள் பரப்பி வருகின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "மாநகராட்சி சார்பில் சாலைகள் போடுவதற்கு பணிகள் நடக்கின்றன. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டுவிடும். மாநகராட்சி சாலைகளில் விரிசல் இல்லை. அது தேசிய நெடுஞ்சாலைத்துறை போடும் சாலையாக இருக்கலாம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x