Published : 04 Jan 2022 01:14 PM
Last Updated : 04 Jan 2022 01:14 PM

பொங்கல் பரிசுத் தொகுப்பு : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “உலகிற்கே அச்சாணியாகத் திகழும் உழவுத் தொழிலைப் போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாளாகவும், உழைப்பின் சிறப்பையும், உழவுத் தொழிலுக்கு உயிரூட்டும் சூரியனையும், உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும் போற்றுகின்ற நன்னாளாகவும், சாதி, மத, பேதமற்று நாம் அனைவரும் ஓரினம் - தமிழினம் என்ற உன்னத உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைத் தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் ஆகிய மளிகைப் பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய தொகுப்பு மற்றும் முழு கரும்பும் சேர்த்து 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பைத் தமிழகத்தில் வழங்கிடும் பணியைத் தொடங்கி வைப்பதன் அடையாளமாக, தமிழக முதல்வர் இன்று (4.1.2022) தலைமைச் செயலகத்தில், 10 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார்.

இச்சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதைத் தவிர்க்கவும், கரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற ஏதுவாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்பினை விநியோகத்திட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பெற்றுக்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் வே.ராஜராமன், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் மருத்துவர் சு.பிரபாகர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x