

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுவர்களுக்கு நாளை முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசிடமிருந்து 83 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன.
புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 13 லட்சத்து 97 ஆயிரத்து 207 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அதன்படி, சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதனிடையே புதுச்சேரி சுகாதாரத்துறை 15 முதுல் 18 வயதுடைய இளம் சிறுவர்களுக்கு அதாவது 2007 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களுக்கு தடுப்பூசி ஜன. 3-ம் தேதி முதல் போட முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவை ஆன்லைனில் அல்லது தடுப்பூசி செலுத்தப்படம் இடங்களில் பதிவு செய்யலாம். இதற்காக கோவின் செயலி ஏற்கனவே உள்ள கணக்கு மூலம் சுய பதிவு செய்யலாம். தனிப்பட்ட மொபைல் எண் மூலம் புதிய கணக்கை உருவாக்கி பதிவு செய்யலாம், நேரடியாக தடுப்பூசி போட செல்லும்போது அங்குள்ள சரிபார்ப்பவர், தடுப்பூசி போடுபவர் மூலம் ஆன்சைட்டிலும் பதிவு செய்லாம் என அறிவித்திருந்தது.
இதையடுத்து புதுச்சேரியில் நாளை (ஜன. 3) முதல் சிறுவர்ளுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை பள்ளியில் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார். இதற்காக மத்திய அரசின் சுகாதாரத் துறையிலிருந்து 83 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளன. இவை குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
''புதுச்சேரியில் 15 முதல் 18 வயதினர் சுமார் 1 லட்சம் பேர் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள், கல்லூரியில் முதலாமாண்டு படிப்பவர்களாக உள்ளனர். முதலில் பள்ளிகளுக்கும், தொடர்ந்து கல்லூரிகளுக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசிகளை செலுத்த உள்ளோம். இதற்காக பள்ளிகளிலேயே மாணவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதியப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இப்பணியில் 1,000 சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்'' என புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.