Published : 28 Dec 2021 08:13 AM
Last Updated : 28 Dec 2021 08:13 AM

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் பாகங்கள் அகற்றப்பட்டதால் நஞ்சப்பசத்திரத்தில் ராணுவ கட்டுப்பாடு நீக்கம்: சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இருந்து அனைத்து பாகங்களும் மீட்கப்பட்டு சூலூர் கொண்டுசெல்லப்பட்டதால், நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ம் தேதி விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் உட்பட 14 பேர் உயிர்இழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஏர்மார்ஷல் மன்வேந்தர் சிங் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

விபத்து ஏற்பட்ட நஞ்சப்பசத்திரம் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டது பொதுமக்கள் விபத்து நடந்த பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அந்த இடம் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்தது. கடந்த4 நாட்களாக விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் பாகங்களை உடைத்து லாரியில் ஏற்றி சூலூர்கொண்டு சென்றனர். ஹெலிகாப்டரின் பெரிய பாகங்களை உடைக்காமல் அப்படியே கொண்டுசெல்ல திட்டமிட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு எலக்ட்ரிக் ரோப்மூலம் இன்ஜின் உட்பட பெரிய பாகங்களை அப்புறப்படுத்தி லாரிகளில் ஏற்றி கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்றனர். ஹெலிகாப்டரின் அனைத்து பாகங்களும் சம்பவ இடத்தில் இருந்து அகற்றி சூலூர் கொண்டு செல்லப்பட்டதால், ராணுவ கட்டுபாட்டில் இருந்து நஞ்சப்பசத்திரம் பகுதி விடுவிக்கப்பட்டது. ராணுவத்தினர் அனைவரும் அங்கிருந்து திரும்பினர். இதனால், நஞ்சப்ப சத்திரம் பகுதி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். இதனால், இப்பகுதி தற்காலிக சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x