Published : 21 Dec 2021 01:47 PM
Last Updated : 21 Dec 2021 01:47 PM

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு; ஆத்மார்த்தமான முயற்சியாக இருக்க வேண்டும்: மநீம

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்களை இணைப்பது, போலி வாக்காளர் பட்டியல்களை நீக்குவதற்கான ஆத்மார்த்தமான முயற்சியாக இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஏப்ரலில் தனது முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது மக்கள் நீதி மய்யம். தேர்தல் முடிந்த பிறகு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் சந்தித்து அளித்த மனுவில், ஒரே நபர் பல வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருப்பது தொடர்பாக, கீழ்க்காணும் விஷயங்களையும் குறிப்பிட்டிருந்தோம்.

1) நடைபெற்ற தேர்தலில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு, வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களித்த சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கேள்விப்படுகிறோம். எங்களுக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

2) ஒரே வார்டில், ஒரே முகவரியில் வசிக்கும் ஒருவருக்கு அவரது பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட தகவல்களுடன் ஒன்றிற்கு மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வெவ்வேறு எண்களுடன் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம்.

3) வெவ்வேறு வழிகளில் விண்ணப்பித்து ஒன்றிற்கும் மேற்பட்ட அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்பவர்கள், தேர்தல் நாளன்று வெவ்வேறு வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கிறார்கள். தனக்குத் தோல் ஒவ்வாமை உள்ளது என்று சொல்லி, நகத்தில் மட்டும் மை வைத்துக்கொள்கிறார்கள். பின்னர், அதை ரிமூவர் மூலம் அழித்துவிட்டு வாக்கு இருக்கும் இன்னொரு வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கிறார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

4) வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்போது மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டிய பொறுப்பு, தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெருகிவிட்ட சூழலில், விதிமுறைகளைச் செயல்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் அல்லது முறைகேடுகள் நடப்பதைக் கண்டறிவதற்கும் எளிய வழிகள் பல இருக்கின்றன.

5) வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் மேலும் துல்லியமாக நிகழ்வதை, தேர்தல் ஆணையம் உறுதி செய்யவேண்டும்.

மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைக்குத் தீர்வாக சில பரிந்துரைகளையும் அந்த மனுவில் தெரிவித்திருந்தோம்.

வாக்காளர்கள் பட்டியல் குறித்து வீடுகளுக்குச் சென்று சரிபார்க்கலாம். அப்படியே இல்லையென்றாலும் ஆதார் கார்டு எண் அல்லது மொபைல் எண் ஆகியவற்றின் உதவியோடு போலி வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் கண்டறிந்து உடனடியாக நீக்கலாம். சமீபத்திய இந்தியத் தேர்தல்களில் 17 வாக்குகள் வித்தியாசத்தில் சட்டமன்றத் தேர்தலிலும், 44 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத் தேர்தலிலும் முடிவு வருகிறது.

இப்படியான சூழலில், தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் வாக்காளர் பட்டியல் மற்றும் அடையாள அட்டைகளை இறுதி செய்ய வேண்டும். தொழில்நுட்பத்தின் துணையுடன் மேலும் துல்லியமாகச் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

தற்போது மத்திய பாஜக அரசு, எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் பல சந்தேகங்களும் கேள்விகளும் மக்கள் நீதி மய்யத்திற்கும் இருந்தாலும், போலி வாக்காளர் அடையாள அட்டைகளை நீக்கம் செய்வதற்கான முதற்படியாக இந்த முயற்சி அமைய வேண்டும் என நினைக்கிறோம்.

வாக்காளர் பட்டியலில் வெவ்வேறு பெயர்களில் தங்களைப் பதிவு செய்துகொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட அடையாள அட்டைகளை வைத்துக்கொண்டு வாக்குப்பதிவு செய்ய முயல்பவர்கள் ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பவர்கள். வாக்காளர் பட்டியலிலிருந்து இந்தப் போலிகள் நீக்கப்படுவதற்கான முயற்சிகளில் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைத்து அரசியல் சக்திகளும் ஈடுபட வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது" என்று தங்கவேலு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x