Published : 18 Dec 2021 01:25 PM
Last Updated : 18 Dec 2021 01:25 PM

பெண்ணின் திருமண வயது உயர்வு: மக்கள் கருத்தைக் கேட்டு முடிவு செய்யவும் - விஜயகாந்த்

சென்னை: பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் விவகாரத்தில் மக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும் என தேமுதிக தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது. இதன் மூலம், கல்வி, வேலைவாய்ப்பில் பெண்கள் முன்னேற்றம் அடைவதுடன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்கள் பக்குவம் அடைவார்கள். சுயமாக சிந்தித்து எதிர்கால வாழ்க்கையை அவர்களால் சுமுகமாக வழிநடத்திட முடியும்.

அதேசமயம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், வரதட்சணைக் கொடுமைகள், விவாகரத்துகள் தற்போது அதிகரித்து வருவதால், அவர்களைப் பாதுகாத்திடும் பொருட்டு, கிராமப்புற மக்கள் 18 வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்ய விரும்புகின்றனர்.

இளம் பெண்களை வீட்டில் வைத்துக்கொண்டு காலம் தாழ்த்த கிராமப்புற மக்கள் விரும்புவதில்லை. எனவே பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் விவகாரத்தில் மக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும்.

மேலும் இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கை அடங்கியுள்ளதால் மத்திய அரசு தீர்க்கமான நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஓட்டுரிமைக்கு 18 வயது, திருமணத்திற்கு 21 வயதா என்கிற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

அதேபோல் ஆண்களுக்கான திருமண வயதும் 21 தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே ஆண்களுக்கான வயது வரம்பில் மாற்றம் வருகிறதா என்பது குறித்தும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x