Published : 17 Dec 2021 05:00 PM
Last Updated : 17 Dec 2021 05:00 PM

ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர் தொடர்பில் இருந்த 278 பேர் கண்காணிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 278 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக அறிவித்த அறிவிப்புகளில் ஒன்றான கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி சேவைகளை குறுஞ்செய்தி மூலமாக நினைவூட்டல் மேம்படுத்தும் திட்டத்தை இன்று (17-12-2021) சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பிறகு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினார்'' என்று தெரிவித்துள்ளது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

"தமிழத்தில் உள்ள 11 லட்சம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 9 லட்சம் குழந்தைகள் இந்தத் தடுப்பூசி குறித்த குறுஞ்செய்தி திட்டம் மூலம் பயனடைவார்கள். இதுபோல முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்கும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

தமிழகத்திற்கு அதிக ஆபத்து உள்ள நாடுகளிலிருந்து வந்த 12,767 பேருக்கும், மற்ற வெளிநாட்டில் இருந்து வந்த 2,101 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தமாக 14,868 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 70 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 5 பேருக்கு கரோனா மறு ஆய்வில் நெகட்டிவ் வந்துள்ளதை அடுத்து 65 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 28 பேருக்கு ‘எஸ்’ வகை மரபு மாற்றம் கண்டறியப்பட்டு ஒமைக்ரான் வகை கரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. ‘எஸ்’ வகை மரபு மாற்றம் கண்டறியப்பட்ட அனைவரது மாதிரிகளும் மரபியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அதில் 10 பேரின் முடிவுகள் வந்துள்ளதாகவும், அதில் 8 பேருக்கு டெல்டா, ஒருவருக்கு ஒமைக்ரான், ஒருவருக்கு என்ன தொற்று என்று உறுதி செய்யப்படவில்லை. அவருக்கு மட்டும் மறு ஆய்வு செய்யப்படும்.

குறைந்த ஆபத்து உள்ள நாடுகளிலிருந்து வந்தவர்களுக்குத்தான் தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக ஆபத்து உள்ள நாட்டுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு 7 நாட்களுக்குப் பின்னர் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுத உள்ளேன். மேலும் அவர்கள் அனைவரும் விமான நிலையத்திற்கு வந்தவுடன் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யவும் அனுமதி அளிக்குமாறும் கடிதம் எழுதவுள்ளேன்.

ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டவருடன் தொடர்புடைய 278 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்''.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x