Published : 11 Jun 2014 08:30 AM
Last Updated : 11 Jun 2014 08:30 AM

தோழர்களை கைவிட்டதில்லை: மார்க்சிஸ்ட் விளக்கம்

தோழர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் கைவிட்டதில்லை என்று அக்கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

ஜூன் 10-ம் தேதி வெளியான `தி இந்து’வில் டேப்காதர் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. ‘டேப் காதர்’ 1950-களில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துள்ளார். 1959-ல் பம்பாய் சென்றுள்ளார்.

அதற்கு பிறகு 1967-களில் மார்க்சிஸ்ட் கட்சியில் சில ஆண்டுகள் இருந்தார். மீண்டும் மகாராஷ்டிரம் சென்று தொழில் செய்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் தொடர்பு இல்லை.

4 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு தோழர் இவரை அழைத்து வந்தார். சில மாதங்கள் தஞ்சை கட்சி அலுவலகத்தில் தங்கியிருந்தார். பிறகு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அவராகவே அலுவலகத்திலிருந்து சென்றுவிட்டார்.

கட்சிக்காக உழைத்தவர்களை மார்க்சிஸ்ட் கைவிட்டதில்லை. எதிர்காலத்திலும் கைவிடாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x