Published : 15 Dec 2021 04:39 PM
Last Updated : 15 Dec 2021 04:39 PM

கடன் தொல்லை தற்கொலைளைத் தடுக்க சட்டப்பூர்வ அமைப்பு: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கடன் தொல்லையால் அதிகரிக்கும் தற்கொலைகளைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில், ''சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் தாய், தந்தை, மகன் என மூவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. டிசம்பர் மாதத்தில் கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை செய்துகொள்வது மூன்றாவது நிகழ்வு ஆகும்.

முன்னதாக, கடன் தொல்லை காரணமாக தஞ்சாவூர் ரெட்டிப்பாளையத்தில் தொழிலதிபர் ஒருவர் மனைவி, மகனுடனும், ராணிப்பேட்டை காவேரிப்பாக்கத்தில் பேராசிரியர் ஒருவர் மனைவி, மகனுடனும் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடப்பு டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடந்தது. இவை தடுக்கப்பட வேண்டும்.

தீர்க்க முடியாத கடன் தொல்லையால் மன உளைச்சலும், அவமானமும் ஏற்படும்போது தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்படுவது இயல்பானதுதான். ஏற்கெனவே தற்கொலையில் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தில் இத்தகைய நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும்.

கந்து வட்டி உள்ளிட்ட தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்களின் சிக்கலைக் கேட்டு தீர்வு வழங்க, ஒரு நிலையான சட்டப்பூர்வ அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு மனநலக் கலந்தாய்வு வழங்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்''.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x