Published : 15 Dec 2021 10:30 AM
Last Updated : 15 Dec 2021 10:30 AM

கெயில் எரிகாற்றுக் குழாய்களை விளைநிலங்களில் பதிக்கும் முடிவைக் கைவிடுக: மத்திய அமைச்சரிடம் வைகோ நேரில் வலியுறுத்தல்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் நேற்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து எரிவாயுக் குழாய்களை தமிழக விளைநிலங்களில் பதிக்க வேண்டாமென மனு அளித்தார்.

புதுடெல்லி: கெயில் எரிகாற்றுக் குழாய்களைத் தமிழகத்தின் விளைநிலங்களில் பதிக்க வேண்டாம் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் வைகோ நேரில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட கெயில் திட்டம், விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக, இன்று வரையிலும் செயல்படுத்த முடியவில்லை, தற்போது மீண்டும் விளைநிலங்களுக்குள் எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்றுக் (எரிவாயு) குழாய்களைத் தமிழக மாவட்டங்கள் வழியாகப் பதிக்க மத்திய அரசு முடிவு செய்தள்ளதாக அறிவிப்புகள் வந்துள்ளன. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து இதுகுறித்து சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

டெல்லி சாஸ்திரி பவன் அலுவலகத்தில் நேற்று மாலை 7 மணி அளவில் அமைச்சரிடம் வைகோ அளித்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:

''அமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கு வணக்கம்.

தமிழ்நாட்டில், எண்ணெய் மற்றும் எரிகாற்றுக் குழாய்கள் பதிக்கும் பணிகள், கீழ்க்காணும் இடங்களில் விரைவில் தொடங்க இருக்கின்றன.

1. இருகூர் - தேவனகொந்தை - பாரத் பெட்ரோலியம்.

2. கொச்சி - கூட்டநாடு கெயில்

தமிழகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், இந்தக் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. அந்தக் குழாய்களை, விவசாய நிலங்களுக்கு உள்ளே பதிக்க இருக்கின்றார்கள். இதனால், விளைநிலங்களும், வேளாண் மக்களின் வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படும். மேற்கண்ட மாவட்டங்களில் வேளாண் நிலங்களின் சந்தை மதிப்பைச் சார்ந்து வாழ்கின்ற 30,000 விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட கெயில் திட்டம், விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக, இன்று வரையிலும் செயல்படுத்த முடியவில்லை.

விவசாயிகளின் எதிர்ப்பை உணர்ந்து, 2013ஆம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வர், கெயில் நிறுவனத்தின் கொச்சி-கூட்டநாடு திட்டத்திற்காக, எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்றுக் குழாய்களை, சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில், ஓரமாகப் பதிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினார். அவ்வாறு, இதற்கு முன்பு எத்தனையோ இடங்களில், சாலைகளின் ஓரமாகவே குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றன. அண்மையில், தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி-தருமபுரி இடையே, 80 கிலோ மீட்டர் தொலைவிற்கு, சாலை ஓரமாகவே குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட இரு திட்டங்களும், வணிக நோக்கம் கொண்டவை. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, பாதிக்கப்படுகின்ற உழவர்களின் சார்பில், கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைக்கின்றேன்:

1. சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் அருகில், பயன்பாட்டுத் தாழ்வாரங்களை உருவாக்க வேண்டும்.

2. அதைப் பயன்படுத்தி, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் இருகூர்-தேவனகொந்தை மற்றும் கெயில் நிறுவனத்தின் கொச்சி -கூட்டநாடு எண்ணெய் இயற்கை எரிகாற்றுக் குழாய்களை, சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரமாகவே பதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்''.

இவ்வாறு வைகோ கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x