Last Updated : 14 Dec, 2021 03:51 PM

 

Published : 14 Dec 2021 03:51 PM
Last Updated : 14 Dec 2021 03:51 PM

சட்டப் பேரவைத் தலைவருக்கு நிதி- நிர்வாகத்தில் உரிய அதிகாரம்: டெல்லியில் புதுவை சபாநாயகர் வலியுறுத்தல்

புதுச்சேரி: சட்டப்பேரவைச் செயலகத்தின் அதிகாரிகள், பணியாளர்கள் நியமனம், நிதி நிர்வாக விஷயத்தில் சுயாட்சி பெற்றவராகப் பேரவைத் தலைவர் இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற வளாகக் கருத்தரங்க அறையில் புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் வலியுறுத்தினார்.

தற்போதைய புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 33 பேரில் பேரவைத் தலைவர் உட்பட 16 பேர் புதிய முகங்கள். டெல்லியில் நாடாளுமன்றத் தலைவர் ஓம் பிர்லாவிடம், புதுவை எம்எல்ஏக்களுக்கு சட்டமன்றச் செயல்பாடுகள், நிர்வாகம் ஆகியவை குறித்த பயிற்சி அளிக்க வேண்டும் எனப் பேரவைத் தலைவர் செல்வம் கேட்டுக்கொண்டார். இதன்படி இன்று முதல் 3 நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் புதுவை எம்எல்ஏக்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மூத்த எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் பங்கேற்க டெல்லி சென்றனர். இதனால் மொத்தம் 24 மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் புதுவை எம்எல்ஏக்களுக்குப் பயிற்சி தொடங்கியது. நாடாளுமன்றத் தலைவர் ஓம் பிர்லா பயிற்சியை இன்று தொடங்கி வைத்தார். பயிற்சி பயனுள்ளதாக அமைய எம்எல்ஏக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் பேசுகையில், "சமீபத்திய ஆண்டுகளில், புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏற்படும் இடையூறுகள் மிகவும் கவலைக்குரியவை. புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலகம், எந்தவொரு நிர்வாகத் திட்டத்திற்கும் அனுமதி அல்லது ஒப்புதலுக்காக ரகசிய மற்றும் அமைச்சரவைத் துறையைச் சார்ந்திருப்பதை நான் கவனித்தேன்.

தற்போதைய நிதி அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின்படி, சட்டப்பேரவைச் செயலகத்திற்குப் போதுமான பட்ஜெட் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டாலும், ஒவ்வொரு முறையும், செலவின அனுமதி கோரும் முன்மொழிவுகள் நிதித்துறைக்கு அனுமதி அல்லது ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலகத்தில் 136 அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 93 பணியிடங்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளால் அயல் பணியாக நிரப்பப்படுகின்றன.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு அரசு நிர்வாகத்தைக் கண்காணிக்கும் அதிகாரமும் பொறுப்பும் இருப்பதால், புதுச்சேரி பேரவைத் தலைவர், சட்டப்பேரவைச் செயலகத்தின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் நியமனம், ஒழுங்கு அம்சங்கள் உள்ளிட்ட நிதி மற்றும் நிர்வாக விஷயங்களில் சுயாட்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

காலையில் பயிற்சி முடிந்தவுடன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்தை எம்எல்ஏக்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து பிற்பகல் மீண்டும் பயிற்சி அளிக்கப்பட்டது. வரும் 16-ம் தேதி வரை நடைபெறும் பயிற்சியை முடித்துவிட்டுப் புதுவைக்குத் திரும்புகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x