Published : 14 Dec 2021 01:01 PM
Last Updated : 14 Dec 2021 01:01 PM

விபத்துகளைத் தடுக்க மாணவர்களுக்கெனத் தனிப் பேருந்து: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

விபத்துகளைத் தடுக்க காலை - மாலை இரு வேளையும்‌ மாணவர்களுக்கெனத் தனிப் பேருந்து இயக்குவதே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்‌ என்று மக்கள் நீதி மய்யம் தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:

“படியில்‌ பயணம்‌ நொடியில்‌ மரணம்‌: எனப் பேருந்துகளில்‌ எழுதிவைத்து எவ்வளவுதான்‌ விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும்‌ அதனைப் புறந்தள்ளிவிட்டு, பணியில்‌ இருக்கும்‌ ஒட்டுநர் மற்றும்‌ நடத்துநரின்‌ கண்டிப்பையும்‌ கவனத்தில் கொள்ளாமல்‌ பள்ளி-கல்லூரி மாணவர்கள்‌ படியில்‌ பயணிப்பதும்‌, அதனால்‌ உயிரிழப்புகள்‌ நிகழ்வதும்‌ தொடர் கதையாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

பீக்‌ ஹவர்ஸ் என்று சொல்லப்படும்‌ காலை-மாலை நேரங்களில்‌ கூடுதல்‌ பேருந்துகள்‌ இயக்கப்படாத காரணத்தால்‌ பெரும்பாலான பேருந்துகளில்‌ கூட்டம்‌ நிரம்பி வழிய, வேறு வழியின்றி பள்ளி-கல்லூரிகளுக்குச்‌ செல்லும்‌ மாணவர்களும்‌, வேலைக்குச்‌ செல்வோரும்‌ கூட்ட நெரிசலில்‌ படிக்கட்டில்‌ தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணத்தைத்‌ தொடர நேரிடுகிறது.

11.12.2021 அன்று, ராணிப்பேட்டை மாவட்டம்‌ நெமிலியை அடுத்த சயனாபுரம்‌ புதுகண்டிகையைச்‌ சேர்ந்த கல்லூரி மாணவர்‌ தினேஷ்‌ என்பவர்‌, கல்லூரியிலிருந்து வீட்டிற்குச்‌ செல்ல நெரிசல்‌ மிகுந்த பேருந்தில்‌ படிக்கட்டில்‌ பயணம்‌ செய்தபோது தவறி விழுந்து பலியானார்‌. இதேபோன்று கடந்த வாரம்‌ வேலூர்‌ மாவட்டத்தில்‌ நிகழ்ந்த விபத்திலும்‌ கல்லூரி மாணவர்‌ ஒருவர்‌ பலியானார்‌. இந்தத்‌ துயரச்‌ சம்பவங்களுக்குத் தமிழக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்‌.

மேலும்‌ “காலை-மாலை நெரிசல்‌ மிகுந்த வேளைகளில்‌ பள்ளி- கல்லூரிகளுக்குச்‌ செல்லும்‌ மாணவர்கள்‌ கூட்ட நெரிசலில்‌ சிக்கி அவதியுறுவதைத்‌ தவிர்க்கவும்‌, மாணவர்கள்‌ படிக்கட்டில்‌ பயணம்‌ செய்து அதனால்‌ விபத்து ஏற்பட்டு நிகழும்‌ உயிரிழப்புகளைத்‌ தடுக்கவும்‌ வேண்டுமானால்‌, காலை-மாலை இரு வேளையும்‌ மாணவர்களுக்கெனத் தனிப் பேருந்து இயக்குவதே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்‌” என, சென்ற மாதமே அரசுக்குக் கோரிக்கை முன்வைத்தது மக்கள்‌ நீதி மய்யம்‌.

மக்கள்‌ நலன்‌ சார்ந்த அந்தக்‌ கோரிக்கையைத் தமிழக அரசு வழக்கம்போல்‌ கிடப்பில்‌ போட்டுவிட்டது கண்டிக்கத்தக்கது. இந்நிலையில் `பேருந்துகளின் படிக்கட்டில் மாணவர்களோ, பயணிகளோ தொங்கிக்கொண்டு பயணம் செய்தால், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' எனப் போக்குவரத்துத்துறை அறிவித்திருப்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது. இதனை, மக்கள் நீதி மய்யத்தின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கெனவே பணிச்சுமை, ஊதியம், ஊக்கத்தொகை, ஓய்வூதியப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் இந்நிலையில்,தொழிலாளர்களை நசுக்கும் விதமான போக்குவரத்துத் துறையின் உத்தரவு விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு அந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

தமிழகம் முழுவதும் பழுதடைந்த நிலையில் உள்ள பேருந்துகள் அனைத்தையும் தவிர்த்து புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்து அனைத்துப் பேருந்துகளிலும் மற்றும் ஏற்கெனவே தரக் கட்டுப்பாட்டோடு இருக்கும் பழைய பேருந்துகளிலும் தானியங்கிக் கதவுகளை அமைத்திடவும், காலை-மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளிலும் தானியங்கிக் கதவுகளை அமைத்திடவும், குறிப்பிட்ட பயணிகளுக்கு மேல் ஏற்றுவதைத் தவிர்க்கவும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவை மட்டுமன்றி பணியில் இருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை அச்சுறுத்துவதையும், தனிப்பட்ட முறையில் தொடர்ந்து இடையூறு செய்வதையும் தவிர்த்து, அவர்களைத் தாக்குவோர் மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை வலியுறுத்துகிறது”.

இவ்வாறு சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x