Published : 10 Dec 2021 11:03 AM
Last Updated : 10 Dec 2021 11:03 AM

டிச.15, 16-ம் தேதிகளில் தொழில்நுட்பப் பயிற்சி: தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

டிசம்பர் 15,16-ம் தேதிகளில் சென்னை, கிண்டியுள்ள தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

"தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் வாரத்தில் இரண்டு தலைப்புகளில் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

அதன்படி, 15-ம் தேதி அங்கக வேளாண்மை மற்றும் 16-ம் தேதி வீட்டுத் தோட்டப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதனை நகரவாசிகள், மகளிர், விவசாயிகள், மாணவர்கள், சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தப் பயிற்சித் திட்டத்தில் இயற்கை வேளாண்மையின் கருத்துகள் மற்றும் கொள்கைகள், மண் வள மேளாண்மை, இயற்கை முறையில் ஊட்டச்சத்து, பூச்சி மற்றம் நோய் மேலாண்மை, மற்றும் அங்கக தரச் சான்றிதழ் ஆகியவற்றைப் பற்றி சிறப்புத் தொழில்நுட்ப உரையாற்ற உள்ளார்கள். மேலும் வேளாண் சிறப்பு இடுபொருட்கள் தயாரித்தல், மண்புழு உரம், பஞ்சகவ்யா மற்றும் தாவர பூச்சி விரட்டி தயாரிப்பு முறைகள் மற்றும் உயிரியல் சார்ந்த இடுபொருட்களைக் கொண்டு விதை நேர்த்தி ஆகிய செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படும்.

காய்கறித் தோட்டப் பயிற்சியில், பருவம், தோட்டம் அமைக்கும் முறைகள், நாற்றங்கால் அமைத்தல், ஊட்டச்சத்துகள் அளித்தல், பயிற்சி மற்றும் சீரமைப்பு முறைகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை மற்றும் அறுவடை பற்றிய விரிவான செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படும்.

இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-2953 0048 என்ற தொலைபேசி எண்ணிற்குத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிற்சியாளர்கள் பயிற்சியின்போது கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு அனுக வேண்டிய முகவரி:

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல் தளம், சிப்பெட் எதிரில், திருவிக இண்டஸ்ரியல் எஸ்டேட், கிண்டி, சென்னை - 600 032. தொலைபேசி எண் - 044-2953 0048".

இவ்வாறு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x