Published : 10 Dec 2021 03:06 AM
Last Updated : 10 Dec 2021 03:06 AM
ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டுகிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்தவழக்கை நிராகரிக்கக் கோரிமுன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அதன் அடிப்படையில், தனியார் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையடுத்து தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு தனியார் தொலைக்காட்சி நிர்வாகம், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோருக்கு எதிராக கடந்த 2014-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தோனி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான சம்பத் குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, ‘‘தற்போது சாட்சி விசாரணை தொடங்கியுள்ள நிலையில் இந்த மனுவை ஏற்றுக்கொண்டால் பிரதான வழக்கு முடிவுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் தாமதமாகும்’’ என்று கூறி சம்பத்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். சாட்சிவிசாரணையை மனுதாரர் எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி தோனியின் வழக்கை டிச.15-க்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT