Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு? - உளவுத்துறை தகவலால் மெரினாவில் கண்காணிப்பு தீவிரம்

தமிழக கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடித் தேர்வு நடத்த கல்லூரி தேர்வுத் துறை முடிவு செய்து, அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால், கரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்ததால், தேர்வும் ஆன்லைன் மூலமே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், மாணவர்கள் மற்றும் அவர்களது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, மெரினாவில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத் துறை சார்பில் காவல் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் மெரினாவில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அடையாறில் இருந்து மெரினா வரும் வாகனங்கள் 24 மணி நேரமும் தணிக்கை செய்யப்படுகின்றன. மெரினா சர்வீஸ் சாலையிலும் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், சமூக வலைதளங்களை சைபர் க்ரைம் போலீஸாரும் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "தற்போது சம்பந்தப்பட்டவர்களிடம் பேசிவிட்டோம். இனி போராட்டம் நடத்த வாய்ப்பில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x