Published : 19 Nov 2021 12:52 PM
Last Updated : 19 Nov 2021 12:52 PM

விவசாயிகள் மீதான அக்கறை; பிரதமரின் பெருந்தன்மை: ஓபிஎஸ் புகழாரம்

சென்னை

வேளாண் சட்டங்கள் வாபஸ் மூலம் இந்தியப்‌ பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும்‌, விவசாயிகளின்பால்‌ அவருக்கு உள்ள அக்கறையும்‌ வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அவர் கூறுகையில், "மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும். இதனால் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு, களப் பணிகளுக்குத் திரும்ப வேண்டும்" என்று பேசினார்.

இதற்கு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''விவசாயிகளின்‌ வருமானம்‌ பன்மடங்கு உயரும்‌ என்ற நல்ல நோக்கத்தின்‌ அடிப்படையில்‌ 2020ஆம்‌ ஆண்டு அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ திருத்தச்‌ சட்டம்‌, 2020ஆம்‌ ஆண்டு விவசாய விளைபொருள்‌ வியாபாரம்‌ மற்றும்‌ வர்த்தக (மேம்பாடு மற்றும்‌ எளிமைப்படுத்துதல்‌) சட்டம்‌ மற்றும்‌ 2020ஆம்‌ ஆண்டு விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல்‌ மற்றும்‌ பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம்‌ மற்றும்‌ சேவைகள்‌ சட்டம்‌ என மூன்று சட்டங்கள்‌ சென்ற ஆண்டு நாடாளுன்றத்தில்‌ இயற்றப்பட்டன.

இருப்பினும், இந்த மூன்று சட்டங்கள்‌ மூலம்‌, விளைபொருட்களில்‌ பெரும்‌ வணிக நிறுவனங்கள்‌ ஆதிக்கம்‌ செலுத்தத்‌ தொடங்கும்‌ என்றும்‌, விவசாயிகளின்‌ நிலங்கள்‌ பறிபோய்விடும்‌ என்ற அச்சம்‌ விவசாயிகளிடத்தில் இருக்கிறது என்றும்‌, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்றும்‌ தெரிவித்து ஓராண்டிற்கும்‌ மேலாக விவசாயிகள்‌ தொடர்‌ ‌ போராட்டம்‌ நடத்தி வந்தனர்‌.

இந்தச்‌ சூழ்நிலையில்‌, மேற்படி சட்டங்களில்‌ உள்ள பயன்களை விவசாயிகளின்‌ ஒரு பிரிவினரிடம்‌ புரியவைக்க முடியவில்லை என்று தெரிவித்து மேற்படி சட்டங்களைத் திரும்பப்‌ பெறுவதாக இந்தியப்‌ பிரதமர்‌ தெரிவித்துள்ளார்‌. இதன்மூலம்‌, இந்தியப்‌ பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும்‌, விவசாயிகளின்பால்‌ அவருக்கு உள்ள அக்கறையும்‌ வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின்‌ நண்பன்‌ என்பது வெளிச்சம்‌ போட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்தியப்‌ பிரதமரின்‌ இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

இதற்காக அதிமுக சார்பில்‌ பிரதமருக்கு எனது நன்றியினைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்''‌.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x