Published : 18 Nov 2021 12:45 PM
Last Updated : 18 Nov 2021 12:45 PM

மயானப் பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

கரோனா காலத்தில் கடுமையான பணி செய்துவரும் மயானப் பணியாளர்கள் அவர்களை முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்க்காவல் படை பணியாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள், பேரிடர் மேலாண்மை பணியாளர்கள், கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பணியாற்றும் நகராட்சி அல்லது வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோர் ஏற்கனவே முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு மிகஅதிக அளவில் கரோனாவினால் உயிரிழந்தவர்களன் உடல்களை அடக்கம் செய்வதில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடும் பணியாற்றியவர்கள் மயானப் பணியாளர்கள்.

மயானப் பணியாளர்களும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என ஏற்கெனவே தமிழக அரசு கூறியிருந்தது.

இவர்களை உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும், முன்களப் பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது:

''மயானப் பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும், முன்களப் பணியாளர்களாக அறிவிக்கபடுகின்றனர். மத்திய அரசின் ஆணைப்படி, மயானப் பணியாளர்கள் மத்திய அரசின் முன்களப் பணியாளர்களின் பட்டியலில் இல்லாவிடினும் 18 வயதிற்கு மேல் உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும்.

கரோனா நோய்த்தொற்றின் காரணமாக உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணிபுரிந்து வரும் மயானப் பணியாளர்கள் இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்''

இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x