Published : 16 Nov 2021 11:01 AM
Last Updated : 16 Nov 2021 11:01 AM

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ., எஸ்.ஜி.விநாயகமூர்த்தி மறைவு: கே.எஸ்.அழகிரி, ஜி.கே.வாசன் இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.ஜி.விநாயகமூர்த்தி உடல்நலக் குறைவால் மறைந்தார். அவருக்கு வயது 92.
அவரது மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் செய்தி:

"கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றிய மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.ஜி.விநாயகமூர்த்தி தமது 92 வயதில் காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.

1959, 1963, 1968 ஆம் ஆண்டுகளில் சென்னை மாநகராட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1967 முதல் 1974 வரை வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டவர், சென்னை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்.

காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் தலைமை மீது அளவற்ற பற்று கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர். காங்கிரஸ் கட்சியில் முழுநேரமாக பணியாற்றக் கூடிய ஓய்வறியா உழைப்பாளி, செயல்வீரர். அவரின் மறைவு காங்கிரஸ் இயக்கத்துக்கு ஈடு செய்ய முடியாது இழப்பு"

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன் இரங்கல்:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜி.விநாயகமூர்த்தியின் மறைவு மிகுந்த வருத்தத்துக்குரியது. த.மா.கா சார்பில் சென்னை, பூங்கா நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்று உறுப்பினராக தொகுதி மக்களின் நலன் காக்க, தொகுதியின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டவர்.
தான் சார்ந்த தொகுதிக்கு மட்டுமல்லாமல் தமிழகத்தின் வளர்ச்சிக்காக சட்டமன்றத்தில் குரல்கொடுத்தவர். இயக்க வளர்ச்சிக்காக தொடர்ந்து திறம்பட செயல்பட்டவர்.

அரசியல் பணி, மக்கள் பணி ஆகியவற்றில் ஈடுபாடோடு செயல்பட்டவர். காமராஜர், மூப்பனார் ஆகியோரது தலைமையை ஏற்று அரசியல் பணியாற்றியவர். தமிழக மக்கள் நலன், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றிற்காக அர்ப்பணிப்போடு செயல்பட்ட எஸ்.ஜி.விநாயகமூர்த்தியின் மறைவு தமிழக அரசியலுக்கும், தமிழ்நாட்டிற்கும் இழப்பாகும்.அன்னாரது மறைவு இயக்கத்திற்கும், அவரது குடும்பத்தாருக்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் இயக்கத்தினருக்கும், குடுபத்தாருக்கும் த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x