Last Updated : 13 Nov, 2021 06:29 PM

 

Published : 13 Nov 2021 06:29 PM
Last Updated : 13 Nov 2021 06:29 PM

கீழமை நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது உயர் நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற தம்பதி

மதுரை

சிவகங்கை, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், சமரசத் தீர்வு மையத்தில் பரஸ்பர விவாகரத்து தொடர்பாகக் கணவன், மனைவி இடையே சமரசத் தீர்வு ஏற்பட்டதால் இருவருக்கும் விவகாரத்து வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த ஷாலி ரூபாவதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''எனக்கும் செங்கல்பட்டைச் சேர்ந்த ஜான் ஐசக் அகஸ்டின் என்பவருக்கும் மானாமதுரை சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் 2.5.2016-ல் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. பின்னர் குடும்பப் பிரச்சினையால் இருவரும் பிரிந்துவிட்டோம். நான் சிவகங்கை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளேன்.

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் ஜான் விவகாரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். நான் சிவகங்கையில் வசிப்பதால் ஜான் தொடர்ந்துள்ள வழக்கை செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து, சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது பரஸ்பர விவாகரத்து தொடர்பாக ஷாலி ரூபாவதி மற்றும் ஜான் ஐசக் அகஸ்டின் இடையே சமரசமாக முடிவு ஏற்படுத்தும் நோக்கத்தில் வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் உள்ள சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது.

அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இருவரும் மனுக்களில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவது, ஷாலி ரூபாவதிக்கு இறுதி இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்குவது, அவரது நகைகளை அவரிடம் திரும்ப வழங்குவது என சமரச உடன்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர் இடையே பரஸ்பர விவாகரத்து தொடர்பாக சமரச உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனுதாரருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. மனுதாரர்கள் நீதிமன்ற உத்தரவைக் கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். செங்கல்பட்டு வழக்கை சிவகங்கைக்கு மாற்றக்கோரும் மனு மீது எந்த முடிவும் எடுக்க வேண்டியதில்லை. மனு முடித்து வைக்கப்படுகிறது'' என்று நீதிபதி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x