Published : 11 Nov 2021 11:25 AM
Last Updated : 11 Nov 2021 11:25 AM

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு: இன்று மாலை கடலூர் பயணம்

சென்னை

மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் முதல்வர் 2 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளார். இன்று மாலை கடலூர் பயணம் செல்கிறார்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்தே டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வந்த நிலையில், 24 மணி நேரத்தில் நாகை மற்றும் திருப்பூண்டியில் தலா 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஒன்றரை லட்சம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இளம் நாற்றுகள் நீரில் அழுகத் தொடங்கியுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் மூழ்கியுள்ளன.

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ஏக்கர் அளவில் பயிர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து பாதிப்பு

வங்கக் கடலில்நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவான நிலையில் தொடர்ந்து கடுமையாக மழை பெய்து வருகிறது.

இதனால் தொடர்ச்சியான பாதிப்புகளைத் தமிழகம் சந்தித்து வருகிறது. பல இடங்களில் வெள்ள நீர் பாய்ந்து தரைப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படை செயல்பட்டு வருகிறது.

கனமழை காரணமாகத் தமிழகம் முழுவதும் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், ஒருசில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னை அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் 4 நாட்கள் ஆய்வு

சென்னையில் ஏற்பட்டு வெள்ளப் பாதிப்புகளைத் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று வரை முதல்வர் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலிடம் தொலைபேசியில் தமிழக மழை பாதிப்பு நிலவரம் குறித்துக் கேட்டறிந்த பிரதமரிடம் நிவாரண உதவிகள் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அப்போது பிரதமர் தேவையான நிவாரண நிதி, உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அதிகாரிகளிடம் முதல்வர் ஆலோசனை

தற்போது தமிழக பாதிப்புகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில் தொடர்ச்சியான பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்கவேண்டுமென முதல்வர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

சிறப்புக் கண்காணிப்பு அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

இன்று மாலை கடலூர் பயணம்

மழை பாதிப்புகள் மேலும் மேலும் தொடர்ந்து கொண்டிருப்பதால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்தபிறகே இழப்பின் மதிப்பீடு மதிப்பிடப்பட்டு அதற்கான நிவாரணத் தொகையைப் பெற மத்திய அரசிடம் கோரிக்கையாக வைக்க முடியும் என முதல்வர் தெரிவித்திருந்தார்.

சென்னை மாநகரில் 4 நாட்கள் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் மிக அளவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களை நேரில் ஆய்வு முடிவு செய்துள்ளார். இந்த ஆய்வு 2 நாட்கள் தொடரும் எனவும், அதற்கு முன்னதாக மழை பாதிப்புகளைப் பார்வையிட இன்று மாலை கடலூர் மாவட்டம் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x