Last Updated : 10 Nov, 2021 03:08 AM

 

Published : 10 Nov 2021 03:08 AM
Last Updated : 10 Nov 2021 03:08 AM

திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் காற்றில் பறந்த கரோனா வழிகாட்டு நெறிமுறைகள்: நோய் தொற்று பரவும் அபாயம்

திருப்பத்தூரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் திரண்டிருந்த கூட்டம்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவல கத்தில் கரோனா விதிமுறைகளை மீறி நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியால் வரும் நாட்களில் கரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி.எஸ்.ஜவஹர் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா முன்னிலை வகித்தார். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 3,660 பயனாளிகளுக்கு ரூ.32 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றதால் போதுமான இட வசதி இல்லாமல் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், கட்சி தொண்டர்கள், பயனாளிகள் என பலர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றி ஒரே இடத்தில் கூட்டமாக கூடினர்.

ஆனால், திருப்பத்தூரில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் விதிமுறைகளை அரசு அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் கடைப்பிடிக்காமல் கூட்டம், கூட்டமாக ஒரே இடத்தில் கூடி அரசு விழாவை நடத்தியதால் திருப்பத்தூரில் வரும் நாட்களில் கரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, ‘‘திருப்பத்தூர் புதிய மாவட்டம் என்பதால் இம்மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் விரைந்து செயல்படுத்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, மாவட்டத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும், நிலுவையில் உள்ள பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2019-ம் ஆண்டு பரவத்தொடங்கிய கரோனா பெருந்தொற்று இன்னும் நம்மை விட்டு விலகவில்லை. இதை தடுக்க ஒரே வழி தடுப்பூசி போட்டுக்கொள்வது தான். திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி போடப்பட்ட மாவட்டமாக இம்மாவட்டத்தை கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் எஸ்.பி., டாக்டர்.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், திட்ட இயக்குநர் செல்வராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், சட்டப்பேரவை உறுப்பி னர்கள், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x