Last Updated : 07 Nov, 2021 08:22 PM

 

Published : 07 Nov 2021 08:22 PM
Last Updated : 07 Nov 2021 08:22 PM

தோல்வியை கண்டு மனம் தளரக்கூடாது: அதிமுக தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் அறிவுரை

திருப்பத்தூர்:

தோல்வியை கண்டு மனம் தளர வேண்டாம், தோல்வி தான் வெற்றியை தேடி தரும் என அதிமுக தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆலோசனை வழங்கினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் முதல் ஊராட்சி வார்டு கவுன்சிலர் வரையிலான பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியது. அதிமுக பெரிய அளவில் வெற்றிப்பெற வில்லை. 9 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடத்தில் கூட மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றவில்லை. ஒன்றியக்குழுத்தலைவர் பதவிக்கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது.

சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவியுள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனதளவில் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளனர். அதிமுக தலைமை எடுத்து வரும் ஒரு சில முடிவுகளால் தான் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருவதாக அதிமுக தொண்டர்கள் மட்டும் அல்ல அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வெற்றிப்பெற்ற அதிமுக கவுன்சிலர்கள், தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், வணிகவரி மற்றம் பத்திரப்பதிவுத்துறை முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச்செயலாளருமான கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இதற்கான காரணம் என்ன வென்று முதலில் நாம் ஆராய வேண்டும். தேர்தலில் தோல்வியடைந்து விட்டோம் என யாரும் மனம் தளரக்கூடாது. தோல்வி தான் அடுத்து வெற்றியை தேடி தரும்.

இந்த தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்படும். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்கும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் நாம் செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப்பெற்ற அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் மக்களுக்கான பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். அதன் மூலம் அடுத்து வரும் தேர்தலில் நாம் மக்களிடம் தயங்காமல் வாக்கு சேகரிக்க முடியும். தேர்தல் தோல்வியை கண்டு யாரும் கவலைப்பட வேண்டாம். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையே நம்மிடம் தற்போது மேலோங்க வேண்டும்’’ என்றார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கந்திலி மற்றும் திருப்பத்தூர் ஒன்றியங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டவர்கள் கலந்து கொண்டனர். நவம்பர் 8-ம் தேதி (நாளை),ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி ஒன்றியங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுக்கும், நவம்பர் 9-ம் தேதி மாதனூர் மற்றும் ஆலங்காயம் ஒன்றியங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x