Published : 03 Nov 2021 03:54 PM
Last Updated : 03 Nov 2021 03:54 PM

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன: முழு விவரம்

வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எழிலகத்தில் இன்று ( நவ .3) செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விரிவாக எடுத்துரைத்தார்.

அதன் விவரம்:

* சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம், மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.

* பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 94458 69848 மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம்.

* தமிழ்நாடு முதல்வரின் ஆணையின்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் 14754.63 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 83,319 மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு மழை நீர் வடிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* பேரிடர் மேலாண்மையில் தன்னார்வலர்களது பங்களிப்பை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் தன்னார்வலர் ஒருங்கிணைப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* முதல் நிலை மீட்பாளர்களை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தும் பொருட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

* 3915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2897 JCB கள், 2115 ஜெனரேட்டர்கள், 483 ராட்சத பம்புகள் உள்ளிட்ட தேடல் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

* வானிலை முன்னறிவிப்புகளை மீனவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க 21,000 உயர் VHF கருவிகளும், 600 செயற்கைக்கோள் தொலைபேசிகளும், 296 NAVTEX and NAVIC உபகரணங்களும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

* 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,106 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.

* பேரிடர் காலங்களில் ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கு ஹெலிபேட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

* பாதிப்பிற்குள்ளாகும் இடங்களுக்கு உடனடியாக அனுப்பும் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

* மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்கவும், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும், அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்திடவும், நிவாரண முகாம்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்திடவும், மழைக்காலங்களில் தொற்று வியாதிகள் / டெங்கு போன்றவை பரவாமல் இருக்கவும், தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் பேரிடர்களைத் திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு மாநிலம் எவ்வகையான பேரிடரையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x