Published : 02 Nov 2021 03:09 AM
Last Updated : 02 Nov 2021 03:09 AM
கோவைக்கு தேவையான சிறப்புத் திட்டங்களை முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கோவை கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ‘மக்கள் சபை’ கூட்டம் நேற்று நடந்தது. மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து, 6-வது வார்டு இடையர்பாளையம் ராகவேந்திரா நகர், 7-வது வார்டு இடையர்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, 8-வது வார்டு கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 9-வது வார்டு கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பள்ளி, 10-வது வார்டு மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பள்ளி, 11-வது வார்டு கே.கே.புதூரிலுள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மக்கள் சபைக் கூட்டம் நடந்தது.
முன்னதாக, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, ‘‘கோவையில் 150 இடங்களில் மக்களை சந்தித்து மனுக்களை பெறும் நிகழ்வு நடந்து வருகிறது. தற்போது வரை 23 இடங்களில் நடந்த கூட்டத்தில், 12,959 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம். தொழில் வளர்ச்சி, மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப இல்லாமல், மாநகரில் சாலை கட்டமைப்புகள் மோசமாக உள்ளன. தேவையான இடங்களில் சாலைகள் விரிவாக்கம், புதிய சாலைகள் அமைத்தல் குறித்து முதல்வர் அறிவிப்பார். கோவையின் தொழில் வளர்ச்சிக்கும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் ஏற்ப, கோவை மாவட்டத்துக்கு வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை முதல்வர் அறிவிப்பார்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT