Published : 02 Nov 2021 03:10 AM
Last Updated : 02 Nov 2021 03:10 AM

`பறப்பதற்கான சிறகுகள்' திட்டத்தில் வென்ற சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு மடிக்கணினி: நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

சென்னை மாநகராட்சி சார்பில் 'பறப்பதற்கான சிறகுகள்' திட்டத்தின் கீழ், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற போட்டியில் வென்ற மாணவருக்கு மடிக்கணினி மற்றும் சான்றிதழ் வழங்கினார் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு. உடன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர்.

சென்னை

பறப்பதற்கான சிறகுகள் திட்டத்தில் வெற்றி பெற்ற சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு, தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மடிக்கணினிகளை வழங்கிப் பாராட்டினார்.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, கல்வித் துறை, மெட்ராஸ் கிழக்கு ரோட்டரி சங்கம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சிக்கான அறக்கட்டளை ஆகியவை இணைந்து 'பறப்பதற்கான சிறகுகள் என்ற திட்டத்தின் மூலம், கடந்த 6 ஆண்டுகளாக மாநகராட்சிப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி, வாழ்க்கைத் திறன் போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றனர்.

கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக மாணவர்களை வெளிநாடு அழைத்துச் செல்ல இயலாததால், அவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

2020-21-ம் கல்வி ஆண்டில் நடத்தப்பட்ட போட்டியில் 8 மாணவர்கள் வெற்றிபெற்றனர். அவர்களுக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மடிக்கணினிகளை வழங்கிப் பாராட்டினார்.

அதேபோல, மாநகராட்சி சமுதாயக் கல்லூரியில் துணை மருத்துவம் பயின்று, இந்திய மருத்துவ சங்கம் நடத்திய தேர்வுகளில் மாநில அளவில் 2, 3-ம் இடங்களைப் பிடித்த மாணவிகளுக்குப் பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் விஷு மஹாஜன், எஸ்.மனிஷ், கல்வி அலுவலர் ஆர்.பாரதிதாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x