Published : 09 Mar 2016 08:56 PM
Last Updated : 09 Mar 2016 08:56 PM

திமுகவுடன் கூட்டணி அமைத்தால் எனது கல்லறை கூட என்னை மன்னிக்காது: வைகோ ஆவேசம்

திமுகவுடன் கூட்டணி அமைத்தால் எனது கல்லறை கூட என்னை மன்னிக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசத்துடன் தெரிவித்தார்.

மதிமுக மகளிரணி சார்பில் உலக பெண்கள் தின விழா மற்றும் அரசியல் சாரா பெண்கள் கட்சியில் இணையும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது:

பிரமாண்ட குருசேத்திர யுத்த களத்தை நோக்கிச் செல்லும் வேளை இது. அந்த களத்தில் நிச்சயம் நாம் வெல்வோம். இந்த இயக்கம் தான் எனது குடும்பம். நீங்கள்தான் என் உடன்பிறந்தவர்கள்.

திமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகித்த மத்திய அரசுதான் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி தமிழ் இனத்தை அழிக்க காரணமாக இருந்தது. ஒரு இன அழிவுக்கு காரணமானவர் கருணாநிதி. அவரது இயக்கத்துடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்? அப்படி நான் அவரது இயக்கத்துடன் உறவு வைத்தால் எனது கல்லறை கூட என்னை மன்னிக்காது.

தமிழ் இனத்துக்கே கேடு விளைவித்தவர்கள் மகளிர் உரிமை மாநாடு போடுகிறார்கள். தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி. மது கோர தாணடவம் ஆட காரணமே அவர்தான். கருணாநிதிக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மது விற்பனையை தமிழகத்தில் பரவலாக்கினார்கள்.

மக்கள் நல கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கை நிச்சயம் அமல்படுத்துவோம். மதுவின் கொடுமையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டுமெனில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்'' என்று வைகோ பேசினார்.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x