Last Updated : 29 Oct, 2021 03:11 AM

 

Published : 29 Oct 2021 03:11 AM
Last Updated : 29 Oct 2021 03:11 AM

போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் சட்டத் திருத்தத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைக்குமா?

சென்னை

தமிழகத்தில் போலி பத்திரப் பதிவுகளை சார் பதிவாளர்களே ரத்து செய்வதற்காக, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது. அதேசமயம், அதற்கான வழிகாட்டுதல்களில் பட்டா மாற்றம் குறித்த பரிந்துரைகளும் இடம்பெற வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் போலி பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், சமீபத்தில் சட்டப்பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டத் திருத்தம், போலி பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவுத் துறை தலைவரிடம் இருந்து, சார் பதிவாளருக்கு வழங்க வகை செய்கிறது. இதன் மூலம், பொய்யான பத்திரம், நடைமுறையில் உள்ள சட்டங்களால் தடை செய்யப்பட்ட பத்திரங்கள், அரசால் இணைக்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை பதிவு செய்ய, பதிவு அலுவலர் மறுக்க வேண்டும். பதிவுச் சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்தப் பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ, அதை எழுதிக் கொடுத்தவருக்கும், ஆவணத்தின் அனைத்து தரப்பினருக்கும் "சம்பந்தப்பட்ட பத்திரப் பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது" என்று கேட்டு அறிவிப்பு வழங்க வேண்டும்.

அதற்கான பதில் பெறப்பட்டால், அதைக் கருத்தில் கொண்டு பதிவாளர் ஆவணப்பதிவை ரத்து செய்யலாம். பதிவுத் துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு. அதேநேரம், பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பதிவுத் துறை தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

அவர், பதிவாளரின் ஆணையை உறுதிப்படுத்தல், திருத்தம் செய்தல் அல்லது ரத்து செய்யும் உத்தரவை வழங்கலாம். அதற்குப் பிறகு, பதிவுத் துறை தலைவரால் உத்தரவு வழங்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் மாநில அரசிடம் மேல்முறையீடு செய்யலாம். அதேபோல, பதிவு அலுவலர் முறைகேடான பதிவுகளை செய்தால், பதிவு அலுவலருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

ஆனால், நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட பதிவுக்கு இந்த விதிகள் பொருந்தாது. குறிப்பாக, சரி என்று நம்பி செய்யப்பட்ட பதிவுகளுக்கு இது பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தத்துக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதேநேரம், இது மத்திய பதிவுச் சட்டத்தில் மாநில அளவில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம் என்பதால், இந்த சட்டத் திருத்த மசோதா, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவரது ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் உடனடியாக சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்துவிடும்.

பட்டா மாற்றம்

இந்நிலையில், சட்டத் திருத்தம் தொடர்பாக மக்களிடம் பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. குறிப்பாக, போலி பத்திரப் பதிவு மூலம் ஒரு நிலத்தை தன் பெயருக்கு மாற்றிக்கொண்ட ஒருவர்,அதற்கான பட்டாவையும் தன் பெயருக்கு மாற்றிக் கொள்ளும்பட்சத்தில், அந்த பத்திரப் பதிவுபோலியானது எனத் தெரிந்து ரத்து செய்யப்பட்டால், பட்டா மாற்றமும் ரத்து செய்யப்பட வேண்டும். இதற்கான பரிந்துரை அளிக்கும் நடைமுறையையும் இந்த சட்டத் திருத்தத்துக்கான வழிகாட்டுதல்களில் சேர்க்க வேண்டும் என்று மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

பதிவு அலுவலர்கள் கோரிக்கை

இதற்கிடையில், போலி பத்திரப் பதிவை மேற்கொண்ட அலுவலர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்பதை தவிர்க்க வேண்டும் என்று சார் பதிவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "தற்போது கணினி வழி பதிவு என்பதால், பதிவுக்கு வரும் ஆவணங்களை 7-10 நிமிடங்களுக்குள் ஆய்வு செய்து, அனுமதிக்க வேண்டும். இதில் முழு விவரங்களையும் ஆய்வு செய்வது முடியாத காரியம். இது போலி பதிவுகளுக்கு வழிவகுத்து விடுகிறது. எனவே, இதுபோன்ற நிகழ்வுகளில் சார் பதிவாளருக்கு சிறைத் தண்டனை என்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். விரல் ரேகை பதிவு போன்ற வசதிகள் செய்யப்பட்டால், போலி பத்திரப் பதிவு நிகழ்வுகளைத் தடுக்க முடியும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x