Published : 28 Oct 2021 03:06 AM
Last Updated : 28 Oct 2021 03:06 AM

அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

சென்னை

டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசினார்.

பதவியேற்ற பிறகு 2-வது முறையாக கடந்த 22-ம் தேதி டெல்லி புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, 23-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். "தமிழகத்தின் வளர்ச்சி, தமிழக மக்களின் நலன் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்துஆளுநரிடம் பிரதமர் கேட்டறிந்தார்.

மேலும், தமிழக நலனுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர்உறுதி அளித்தார்" என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24-ம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் ஆளுநர் சந்தித்துப் பேசினார்.

கடந்த 5 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள ஆளுநர் நேற்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைவும் நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.

தமிழக அரசின் செயல்பாடுகள், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்கள், எல்லையோர பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தரவிலக்குகோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட மசோதா, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அமித்ஷாவுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x