Published : 25 Oct 2021 07:08 PM
Last Updated : 25 Oct 2021 07:08 PM

கோயில் சிலைகளைப் பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம் கட்டப்பட்டது குறித்து அறிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

தமிழகம் முழுவதும் கோயில் சிலைகளைப் பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம் கட்டப்பட்டது குறித்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள தொன்மையான கோயில்களைப் பாதுகாப்பது தொடர்பாக, 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோயில்களைப் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் பட்டியலைத் தயாரித்து, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

கோயில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றைப் பட்டியலாகத் தயாரிக்க வேண்டும், கோயில்களில் ஸ்ட்ராங் ரூம் அமைத்து, இந்தச் சிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

ஓதுவார்கள், அர்ச்சகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சிலைகள், நகைகளைப் புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளங்களில் வெளியிட வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்பதுடன், கோயிலுக்குச் சொந்தமான நிலங்களுக்கான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அறங்காவலர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், பரம்பரை அறங்காவலர்களை அடையாளம் காண வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும் எனவும், கோயில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்குத் தனித் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்பன உள்பட 75 உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று (அக். 25) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், 75 உத்தரவுகளில் 38 உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 32 உத்தரவுகள் குறித்து விளக்கம் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதால், உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார்.

இதேபோலத் தொல்லியல் துறை சார்பிலும் அறிக்கை அளிக்க அவகாசம் கோரப்பட்டது.

நீதிமன்றத்துக்கு உதவியாக ஆஜரான ரங்கராஜன் நரசிம்மன், உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறித் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாகவும், உத்தரவின்படி மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்காமல் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும், அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், சிலைகளைப் பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம் கட்டப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, ஸ்ட்ராங் ரூம்கள் கட்டப்பட்டதா என அறிக்கை அளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x