Last Updated : 23 Oct, 2021 03:38 PM

 

Published : 23 Oct 2021 03:38 PM
Last Updated : 23 Oct 2021 03:38 PM

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: கைதான 5 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

குற்றவாளிகள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடலூர்

பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராஜ் கொலை வழக்கில் கைதான 5 பேரிடம் கடலூர் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தில் திமுகவைச் சேர்ந்த கடலூர் எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை அமைந்துள்ளது. இங்கு வேலை பார்த்து வந்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ், கடந்த செப்டம்பர் மாதம்19-ம் தேதி இரவு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இது குறித்து, அவரது மகன் செந்தில்வேல் அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், கடந்த 9-ம் தேதியன்று எம்.பி. ரமேஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து எம்.பி. ரமேஷ் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

கடந்த 11-ம் தேதி பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் எம்.பி. ரமேஷ் சரணடைந்தார். நீதிபதி உத்தரவை தொடர்ந்து, அவர் கடலூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த13-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிபிசிஐடி போலீஸார் அவரை 2 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி கோரினர். ஆனால், 24 மணிநேரம் மட்டுமே விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சுமார் 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தியி சிபிசிஐடி போலீஸார், அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையில், கடந்த 20-ம் தேதி எம்.பி. தரப்பில் ஜாமீன் கேட்டு வழக்கறிஞர் சிவராஜ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நேற்று (அக்.22) மனு கடலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி செந்தில்குமார் விசாரணை நடத்தினார். அப்போது, கோவிந்தராஜ் மகன் செந்தில்வேல் தரப்பில் ஆட்சேபனை தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, ஆட்சேபனை மனு தொடர்பான விவரங்கள் தனக்கு அளிக்கப்படாததால், அந்த மனுவை படித்துப் பார்க்க ஒரு நாள் அவகாசம் கேட்டார் வழக்குரைஞர் சிவராஜ். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் ஏ.சந்திரசேகரன் மற்றும் செந்தில்வேல் தரப்பு வழக்கறிஞர் தமிழரசன் ஆகியோர், ஆட்சேபனை தெரிவிக்காததை தொடர்ந்து, மனு மீதான விசாரணையை இன்று (அக். 23) ஒத்திவைத்தார். அதன்படி இன்று மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இதே வழக்கில் கைது செய்யப்பட்ட நடராஜன், அல்லாபிச்சை, கந்தவேல், வினோத், சுந்தர்ராஜன் ஆகிய 5 பேரும் நேற்று (அக். 22) கடலூர் கிளை சிறையில் இருந்து, கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி (பொறுப்பு) சிவபழனி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, 5 பேரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணையையும் நீதிபதி இன்றைக்கு தள்ளி வைத்தார்.

இந்த நிலையில், இன்று 5 பேரையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அதன்படி, 5 பேரும் கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 5 பேரையும் 2 நாள் விசாரணைக்கு சிபிசிஐடி போலீஸார் மனு கோரி மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி பிரபாகர் 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்து 5 பேரையும் கடலூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து சென்று சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x