Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக அளவில் மழைப்பொழிவு கிடைக்கிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இன்று முடிவுக்கு வந்து, வரும் 26-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயல் பாதிப்புகள்
வழக்கமாக, வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை, புயல்காரணமாக தமிழகத்தின் கடலோரமாவட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. இவற்றை கருத்தில்கொண்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சமீபத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், நாளை (அக்.24) காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துகாணொலி வாயிலாக முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார். மழைமுன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைகளையும் வழங்குகிறார்.
குறிப்பாக, நீர்வழிப் பாதைகளை சீரமைப்பது, பொதுமக்களுக்கான போதிய பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைப்பது குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை இக்கூட்டத்தில் முதல்வர் வழங்குவார் என்று தெரிகிறது.
வடகிழக்கு பருவமழை அக்.26-ம் தேதி தொடங்கும்
நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை இன்று விலகுகிறது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 26-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை 23-ம் தேதி (இன்று) விலகுகிறது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 26-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது. இப்பருவமழை காலத்தில் வங்கக்கடலில் புயல்கள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
குமரிக் கடல் பகுதியை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 23-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, திருச்சி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
24-ம் தேதி அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT