Published : 19 Oct 2021 03:07 AM
Last Updated : 19 Oct 2021 03:07 AM

இணக்கமான இந்தியா உருவாக நம்மை அர்ப்பணிப்போம்- ஆளுநர், முதல்வர், தலைவர்கள் மிலாது நபி வாழ்த்து

சென்னை

மிலாது நபி பண்டிகையொட்டி, ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சிதலைவர்கள் வாழ்த்துத் தெரிவித் துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி:

ஆளுநர் ஆர்.என்.ரவி: முகம்மது நபியின் பிறப்பை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் மிலாத்-உன்-நபி கொண்டாட்டத்தில், தமிழக மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நபியின் முக்கிய செய்தி உலகளாவிய அமைதி மற்றும் சகோதரத்துவத்துக்கானது. இந்த நல்ல தருணத்தில், அமைதியான, முற்போக்கான, இணக்கமான இந்தியாவைஉருவாக்க நம்மை அர்ப்பணிப்போம்.

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: உலகெங்கும் மானுடத்தை வழிநடத்தும் மகத்தான போதனைகளை அருளிய மாமனிதர் நபிகள் நாயகம்அவதரித்த இந்நாளில், உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்களுக்கு மிலாது நபி நல்வாழ்த்துகள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஏழை, எளிய மக்களுக்கு உணவளியுங்கள் என்ற கருணை உள்ளத்துக்குச் சொந்தக்காரரான நபிகள் நாயகம், இரக்கமும், அன்புமிக்க அரவணைப்பும் கொண்டவர். உயரியநற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தன்மை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது போதனைகளும், அறிவுரைகளும் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய கருத்துக் கருவூலங்கள். இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகள்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி: நபிகள் நாயகத்தின் அருட்போதனைகளை மக்கள் பின்பற்றிவாழ்ந்தால் உலகில் அன்பும், அறமும், அமைதியும் தழைத்தோங்கும். அவர் பிறந்த இப்புனித நாளில்உலகில் அமைதியும், சகோதரத்து வமும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும் என வாழ்த்துகிறோம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் நபிகள் நாயகத்தின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மிலாது நபி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: உலகில் அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை,எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளர்வதற்கும், அனைத்து நலன்களும், வளங்களும் பெருகவும் உழைக்க வேண்டும் என்று நபிகள் அவதரித்த இந்த நன்னாளில் நாம் உறுதி ஏற்போம்.

சு.திருநாவுக்கரசர் எம்.பி: நபிகள் நாயகத்தின் பிறந்த நாளில்,மதநல்லிணக்கம் தழைத்தோங்கி, மனிதகுலம் ஒற்றுமையாக வாழ,வளம் பெற பிரார்த்திப்போம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அன்பு, சகோதரத்துவம், ஒழுக்கம் போன்ற நல்லுபதேசங்களை வழங்கியவர் நபிகள் நாயகம்.இஸ்லாமிய சகோதார, சகோதரிகளுக்கு மிலாது நபி வாழ்த்துகள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மாமனிதர் நபிகள் நாயகம் பிறந்த நாளில் தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வோம்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: இறைதூதர் அண்ணல் நபிகள் பிறந்தநாளில் அனைவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கட்டும். அன்பும் கருணையும் பரவட்டும். நல்லிணக்கமும் சகோதரத்துவமும் ஓங்கட்டும்.மிலாது நபி வாழ்த்துகள்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்

மேலும், தவாக தலைவர் தி.வேல்முருகன், சமக தலைவர் சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, பாரிவேந்தர் எம்பிஉள்ளிட்டோரும் மிலாது நபிவாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x