Last Updated : 19 Oct, 2021 03:07 AM

 

Published : 19 Oct 2021 03:07 AM
Last Updated : 19 Oct 2021 03:07 AM

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நவம்பரில் இடமாறுதல் கலந்தாய்வு: புதிய விதிமுறைகளின்படி நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு

புதிய விதிகளின்படி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை நவம்பரில் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,431 அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2.3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். வழக்கமாக ஆசிரியர் பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும்.

அதன்படி ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் விருப்பத்தின்பேரில் மாவட்டம் விட்டு மாவட்டம், ஒரே ஒன்றியம் / மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் என 3 பிரிவுகளாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், கரோனா பரவல், சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டு கலந்தாய்வு நடத்தப்படவில்லை.

இந்நிலையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கு புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். அதற்கேற்ப கலந்தாய்வு நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.

பூஜ்ஜிய கலந்தாய்வு

அதன்படி, இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக மாவட்டக்கல்வி அதிகாரிகள், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதாவது அனைத்து பணியிடங்களும் காலிப் பணியிடமாக கருதப்பட்டு பணிமூப்பு அடிப்படையில் இடமாறுதல் வழங்கப்பட்டது. இதற்கு பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.

இதையடுத்து ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வை நவம்பரில் நடத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகளை கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது. இதுகுறித்துபள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

கடந்த காலங்களில் வரைமுறையற்ற பணியிட மாறுதல்களால் வட மாவட்டங்களில் அதிக அளவில்காலிப் பணியிடங்கள் உள்ளன.இதனுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு கலந்தாய்வு நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையே, பூஜ்ஜிய கலந்தாய்வு, கட்டாய பணியிட மாற்றம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு தவறான தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. அதை நம்பி ஆசிரியர்கள் குழம்ப வேண்டாம். ஆசிரியர்களுக்கு பாதிப்பு இல்லாதவாறுதான் கலந்தாய்வுக்கான வரைவுகொள்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

அதில், புதிதாக பணி நியமனம் பெறுபவர்கள் அந்த இடத்தில் குறிப்பிட்ட காலம்வரை பணிபுரிதல், ஏற்கெனவே ஓரிடத்தில் நீண்டகாலமாக பணிபுரியும் ஆசிரியர்கள் பதவி உயர்வு ஏற்பது, ஒரு பள்ளியில் காலிப் பணியிடம் இருப்பின் மாறுதல் தரக்கூடாது, கலந்தாய்வில் பங்கேற்பதற்கான குறைந்தபட்ச பணிக்கால வரம்பு உட்பட அடிப்படையான விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

மருத்துவம், குடும்பச் சூழல் உட்பட சில அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். புதிய விதிமுறைக்கான வரைவு அறிக்கை விரைவில் அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். ஒப்புதல் கிடைத்த பிறகு நவம்பரில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.

மேலும், ஒரு பள்ளியில் காலிப் பணியிடங்கள் இருப்பின் நிர்வாக மாறுதலை தவிர்க்கவும் பரிசீலித்து வருகிறோம். எனவே, ஆசிரியர்கள் வீணாக பதற்றம் அடைய வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x