Published : 16 Oct 2021 03:05 PM
Last Updated : 16 Oct 2021 03:05 PM

கொளத்தூர் தொகுதியில் ரூ.2.87 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.

சென்னை

கொளத்தூர் தொகுதியில் 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 16) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட எவர்வின் பள்ளியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 16 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 5 பயனாளிகளுக்குத் திருமண நிதியுதவி, 2 பயனாளிகளுக்கு வங்கிக் கடன் மானியம், 5 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், 197 பயனாளிகளுக்கு முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவரை இழந்தவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள், சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்த 312 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, கரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த 18 குழந்தைகளுக்கு நிவாரண நிதி என, மொத்தம் 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, கொளத்தூர், பெரியார் நகர், மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் வழங்கப்பட்ட ஒரு அவசரகால ஊர்தியையும், கரோனா தடுப்பூசிப் பணிக்காக 2 வாகனங்களின் சேவைகளையும் முதல்வர் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, 210 நபர்கள் அமரக்கூடிய மூன்று இருக்கைகள் கொண்ட 70 நாற்காலிகளையும் மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக வழங்கினார்.

பின்னர், கொளத்தூர், ஜி.கே.எம்.காலனியிலுள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் 70 பள்ளி மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கி, 34 ஆசிரியர்களுக்குச் சிறப்பு செய்தார்.

மேலும், அப்பள்ளிக்குக் கட்டிடம் கட்டுவதற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையைத் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் கே.வி.ராமமூர்த்தி முதல்வரிடம் வழங்கினார்.

அத்துடன் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் 1,500 மாணவர்கள் அமரும் வகையில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அளிக்கப்பட்ட மேஜைகள் மற்றும் நாற்காலிகளையும் பள்ளியின் பயன்பாட்டுக்காக முதல்வர் வழங்கினார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x