Published : 10 Oct 2021 06:51 PM
Last Updated : 10 Oct 2021 06:51 PM

தமிழகத்தில் முதல் தவணையாக 65%, 2வது தவணையாக 22% தடுப்பூசி

தமிழகத்தில் நேற்று வரை (09-10-2021) 3,74,20,314 பயனாளிகளுக்கு முதலாவது தவணையாக 65 சதவீதமும் மற்றும் 1,29,38,551 பயனாளிகளுக்கு இரண்டாவது தவணையாக 22 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மக்கள் அனைவரையும் கரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் இதுவரை, 12-09-21, 19-09-21, 26-09-21 மற்றும் 03-10-21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நான்கு மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 87,80,262 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இன்று (10.10.2021) தமிழ்நாட்டில் 5-வது மாபெரும் தடுப்பூசி முகாம்கள் மொத்தம் 32,017 மையங்களில் மெகா கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் 1600 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், கிண்டி, மடுவன்கரை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சின்னமலை, புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளி ஆகிய கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடமும், பணியாளர்களிடமும் உரையாடினார்.

மாவட்ட வாரியாக முதலாவது மற்றும் இரண்டாவது கோவிட் தடுப்பூசி தவணை பெற்றவர்கள் பற்றிய விவரங்களை அவர் கேட்டறிந்தார்.
அப்போது தமிழகத்தில் நேற்று வரை (09-10-2021) 3,74,20,314 பயனாளிகளுக்கு முதலாவது தவணையாக 65 சதவீதமும் மற்றும் 1,29,38,551 பயனாளிகளுக்கு இரண்டாவது தவணையாக 22 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது.

“தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், அவரவர் இருப்பிடத்தின் அருகிலேயே முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாலும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களின் இலக்கை முழுமையாக அடைய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x