Last Updated : 10 Oct, 2021 06:31 PM

 

Published : 10 Oct 2021 06:31 PM
Last Updated : 10 Oct 2021 06:31 PM

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தோரில் தேர்வு எழுதியோர் புதுச்சேரியில் 44 சதவீதம் பேர் தான்

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தோரில் புதுச்சேரியில் தேர்வு எழுதியோர் 44 சதவீதம் பேர் தான்.

விண்ணப்பித்தோரில் சரிபாதிக்கும் மேல் தேர்வு எழுதவில்லை.

மத்திய அரசு தேர்வாணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் (யுபிஎஸ்சி) நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வுகள் முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 712 காலிப்பணியிடங்களுக்கான சிவில் சர்வீல் முதல் நிலை தேர்வுகள் இன்று நடைபெற்றது

புதுச்சேரியில் தேர்வு எழுதிட 3 ஆயிரத்து 843 பேர் விண்ணப்பித்து இருந்தனர்

இவர்களுக்காக, லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இதயா பெண்கள் கல்லூரி, கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளி, காந்தி வீதியில் உள்ள பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி, உப்பளம் இமாகுலேட் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

தேர்வு எழுதுவோர் எளிதாக செல்லும் வகையில் புதுவை பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களுக்கு, தேர்வர்கள் காலை 9:20 மணி, மதியம் 2:20 மணிக்குள் வந்தோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத வந்தோர் ஹால் டிக்கெட் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வந்தார்களா என்று சரிபார்த்தார்கள்.

அதையடுத்து மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதிக்கப்பட்டனர். மொபைல்போன், பேஜர், புளு டூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உள்ளதா என்பதும் பரிசோதிக்கப்பட்டது.

கரோனா விதிகளை பின்பற்றி, முககவசம் அணிந்து உள்ளார்களா என்றும் பரிசோதித்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நகரப்பகுதியான காந்தி வீதியில் உள்ள பெத்தி செமினார் பள்ளியில் தேர்வு மையம் இருந்ததால் அச்சாலை மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வழக்கமாக இச்சாலையில் சண்டே மார்க்கெட் நடத்த அனுமதிதரப்படவில்லை. தேர்வர்கள், பெற்றோர் மட்டுமே இப்பகுதி உள்ள சாலை பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பாதிக்கு மேல் தேர்வு எழுதவில்லை

புதுச்சேரியில் தேர்வு எழுத விண்ணப்பித்தோரில் பாதிக்குமேல் தேர்வு எழுதவில்லை. காலையில் 1714 பேரும் (44.6சதவீதம்), மதியம் 1702 பேரும் (44.28 சதவீதம்) மட்டுமே தேர்வு எழுதினர். காலையில் 55.4 சதவீதம் பேரும், மதியம் 55.71 சதவீதம் பேரும் தேர்வு எழுதவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x