Last Updated : 10 Oct, 2021 03:17 AM

 

Published : 10 Oct 2021 03:17 AM
Last Updated : 10 Oct 2021 03:17 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணி தீவிரம்: இலக்கை தாண்டி 15 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் சம்பா சாகுபடி பருவத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணியில் விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பருவத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 50 நாட்களில் 61,750 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகியநெல் சாகுபடி பருவங்களில் சுமார்2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடை கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. இதனால், சொர்ணவாரி பருவத்தில் சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் நெல் மகசூல் கிடைத்துள்ளது.

இந்நிலையில்,மாவட்டத்தில் சம்பா சாகுபடி பருவத்தில் நெல்பயிர் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் சம்பத்குமார் தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பருவத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணி கடந்தஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கியது. நவம்பர் வரை இப்பணி நடைபெற உள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 680 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடவு இயந்திரங்கள், விவசாய தொழிலாளர்கள் போதிய அளவில் இருப்பதால், கடந்த 50 நாட்களில் கடம்பத்தூர், பூண்டி, எல்லாபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து வட்டார பகுதிகளிலும் சுமார் 61,750 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது.

டி.கே.எம் 13, கோ ஆர் 51, பி.பி.டி 5204, எம்.டி.வி.1010 உள்ளிட்ட நெற்பயிர் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன. சம்பா பருவத்துக்கு தேவையான யூரியா, உரம் போன்ற இடு பொருட்கள் போதியஅளவில் வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தனியார் உரக்கடைகளில் இருப்பில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், இப்பருவத்துக்கான பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, மாவட்டத்தில் இலக்கை விட சுமார் 14,820 ஏக்கர்பரப்பளவில் சம்பா நெற்பயிர் சாகுபடி நடைபெறும் எனவும், டிசம்பரில் தொடங்கி, பிப்ரவரியில் முடியும் வரை நெல் அறுவடையின்போது ஒன்றரை லட்சம் மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x