Last Updated : 09 Oct, 2021 10:18 AM

 

Published : 09 Oct 2021 10:18 AM
Last Updated : 09 Oct 2021 10:18 AM

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பு

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தேர்தலின் போது நிரப்பப்படாத பதவியிடங்கள் மற்றும் ஜூன் 2021 மாதம் வரை காலியாகவுள்ள 54 பதவியிடங்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் சாதாரண-தற்செயல் தேர்தல்கள் - 2021 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெறப்பட்ட வேட்புமனுக்களின் அடிப்படையில் 29 கிராம ஊராட்சி வார்டு பதவியிடங்களுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மீதமுள்ள 1 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 4 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 17 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 25 பதவியிடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு 6 வேட்பாளர்கள் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு 17 வேட்பாளர்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கு 15 வேட்பாளர்களும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு 53 வேட்பாளர்கள் என மொத்தம் 91 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்காக 162 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 40,059 ஆண் வாக்காளர்களும், 42,894 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலின வாக்காளர்களும், ஆக மொத்தம் 82,962 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா பாதிப்பு உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.

வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களாக 725 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 162 வாக்குச்சாவடி மையங்களில் 34 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடி மையங்களாக கண்டறியப்பட்டு 17 வாக்குச்சாவடி மையங்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.

விருதுநகர் அருகே உள்ள பாவாலி ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு பதிவினை மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் வாக்கு பதிவுகளையும் பாதுகாப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x