Last Updated : 07 Oct, 2021 06:57 PM

 

Published : 07 Oct 2021 06:57 PM
Last Updated : 07 Oct 2021 06:57 PM

ரூ.10 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர்: நீதிமன்ற கெடுவால் ஒரு மணி நேரத்தில் ஆஜரான கணவர்

பேக் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் கைதானார். உயர் நீதிமன்றம் விதித்த கெடுவால் அவரின் கணவர் உடனடியாக 1 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

இளையான்குடியைச் சேர்ந்த பேக் டெய்லர் அர்ஷத் என்பவரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி வசந்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''வசந்தியின் கணவர், விசாரணைக்காக ஆஜராகவில்லை. மனுதாரரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கணவரின் செல்போன் எண் கேட்டால் தெரியவில்லை என்று கூறியுள்ளார். 90 சதவீதக் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது'' என்று தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில், ''மனுதாரரின் கணவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதற்காக, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிப்பது சரியல்ல'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ''மனுதாரரின் கணவர் ஒரு மணி நேரத்தில் விசாரணை அதிகாரி முன்பாக ஆஜராக வேண்டும். விசாரணை அதிகாரி அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். அவர் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கினால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும்'' என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

நீதிபதியின் உத்தரவை அடுத்து வசந்தியின் கணவர் இன்று விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜரானார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x