Published : 05 Mar 2016 09:40 AM
Last Updated : 05 Mar 2016 09:40 AM

சத்துணவு முட்டை கொள்முதலில் எந்த முறைகேடும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

சத்துணவு முட்டை கொள் முதலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று ஒருங் கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம் பாடியை சேர்ந்த எம்.ஜெயகுமார் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். ‘‘தேசிய முட்டை ஒருங் கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலையைவிட அதிக விலைக்கு சத்துணவு முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முட்டை கொள் முதலில் முறைகேட்டில் ஈடு படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று அதில் கோரி யிருந்தார்.

நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஒருங்கிணைந்த குழந் தைகள் மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கோழிப் பண்ணை வரையி லான விலையைத்தான் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கிறது. பண்ணை யில் இருந்து, விற்பனை செய்யப்படும் இடத்துக்கு முட்டையை எடுத்து செல்வதற் கான போக்குவரத்து செலவு உள்ளிட்ட செலவினங்கள் இதில் அடங்காது.

மாவட்ட கொள்முதல் பின்னர் மாநில அளவிலான கொள்முத லாக மாற்றப்பட்டது. இந்த முறையில் முட்டை கொள்முதல் செய்வது செல்லும் என்று ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு முட்டை விநி யோகம் செய்வதில் எந்த புகாரும் வரவில்லை. மாநில அளவிலான முட்டை கொள் முதலில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை.

2015 ஜூலை முதல் 2016 ஜூன் வரை ஒரு முட்டை விலை ரூ.3.90 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்கு வரத்து உள்ளிட்ட செலவுகளை யும் சேர்த்தால் ரூ.4.80 வரை விற்கப்படலாம். ஆனாலும்கூட, ஒரு முட்டை விலை ரூ.4.35 என்றுதான் முட்டை கொள்முதல் ஒப்பந்தக் குழு நிர்ணயித்துள் ளது. முட்டை விலை அதி கரித்தாலும் ஒப்பந்ததாரர் ஆண்டு முழுவதும் ரூ.4.35-க் குத்தான் கொடுத்தாக வேண்டும். இந்நிலையில், தவறான தகவல்களைக் கூறி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த மனுதாரர் முயற்சிக்கிறார். அதிகாரிகள் மீது அநாவசியமாக குற்றம் சுமத்துகிறார். எனவே, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அரசுத்தரப்பு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

முட்டை விநியோகத்துக்காக மாநில அளவிலான ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவன மும் பதில் மனு தாக்கல் செய் துள்ளது.

வழக்கு விசாரணையை நீதிபதி சுப்பையா வரும் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x