Published : 05 Oct 2021 03:11 AM
Last Updated : 05 Oct 2021 03:11 AM

தேசிய நெடுஞ்சாலையில் 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் செல்லலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணை ரத்து; 60 முதல் 100 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்லும் வகையில் புதிய அறிவிப்பாணை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு: மக்கள் நலன் கருதி நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

விரைவு மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிமீ முதல் 120 கிமீ வேகத்தில் வாகனங்கள் செல்லலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்தியாவின் சாலை கட்டமைப்புக்கு ஏற்றவாறு வாகனங்கள் 60 முதல் 100 கிமீ வேகத்துக்குள் செல்ல அறிவிப்பாணை வெளியிட உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைமத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய சாலைகளில் நடத்தப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி ஒவ்வொருமணி நேரத்துக்கும் 48 இருசக்கர வாகனஓட்டிகள் விபத்துகளால் உயிரிழப்பதாகவும், வாகனங்களின் அதிவேகமே இந்த விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்றும் தேசிய குற்ற ஆவணப் பதிவேடு சொல்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு 1.37 லட்சமாகஇருந்த விபத்து எண்ணிக்கை 2019-ம் ஆண்டு 4.67 லட்சமாக உயர்ந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பிராந்திய ஆலோசகரான டாக்டர் பதஞ்சலி தேவ் நாயர், ‘‘வாகனத்தின் வேகத்தை மணிக்கு 55 முதல் 57 கிமீ ஆக குறைத்தால் இந்தியாவில் 30 முதல் 37 சதவீதம் பேர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதைத் தவிர்க்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

மற்ற நாடுகளைப் போல இந்தியாவில் அதிவேக பயணத்துக்கான சாலை கட்டமைப்போ, வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வோ இன்னும் முழுமையாக ஏற்படவில்லை. இதனால் இந்தியாவில் அதிவேக வாகனங்களால் ஏற்படும் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன.

இதற்கிடையே இந்தியாவில் உள்ளஎக்ஸ்பிரஸ் சாலைகளில் வாகனங்கள் மணிக்கு 120 கிமீ வேகத்திலும், தேசியநெடுஞ்சாலைகளில் 100 கிமீ வேகத்திலும்,நகர்ப்புற சாலைகளில் 70 கிமீ வேகத்திலும்செல்லலாம் என மத்திய அரசு 2018-ம் ஆண்டு அறிவி்ப்பாணை வெளியிட்டது.

இந்நிலையில், சாலை விபத்தில் சிக்கி 90 சதவீதம் பாதிப்படைந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் பல் மருத்துவருக்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.18.43 லட்சத்தில் இருந்து ரூ.1.49 கோடியாக உயர்த்தி வழங்க சமீபத்தில் உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோர், சாலை விபத்துகளால் ஏற்படும்உயிர்ப்பலியை தடுக்கும் நோக்கில் அந்தவழக்கின் மூலமாக மற்றொரு முக்கியஅறிவுறுத்தலையும் மத்திய அரசுக்கு உத்தரவாகப் பிறப்பித்துள்ளனர்.

இந்தியாவில் சாலைகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, வாகனங்களின் இன்ஜின் தொழி்ல்நுட்பமும் வளர்ச்சி கண்டுள்ளதால் வாகனங்களுக்கான வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்த காரணத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தங்களது உத்தரவில் கூறியிருப்பதாவது:

உலகளவில் ஒப்பீடு செய்தால் ஒரு சதவீத வாகனங்கள் தான் இந்தியாவில் உள்ளன. ஆனால் சாலை விபத்துகள் இந்தியாவில் 6 சதவீதம் நடைபெறுகிறது. அதிவேகம், மதுஅருந்தி வாகனம் இயக்குவது போன்றவற்றால் விதிமீறல்கள் அரங்கேறி விபத்து, அதன் காரணமாக மரணம் என விலைமதிப்பற்ற மனித உயிர்கணநொடியில் நம்மை விட்டுப் பிரிகிறது.

எனவே இந்தியாவில் வாகனங்கள், விரைவு சாலைகளில் மணிக்கு 120 கிமீ வேகத்திலும், 4 வழிச்சாலை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிமீ வேகத்திலும், நகர்ப்புற சாலைகளில் 70 கிமீ வேகத்திலும் செல்லலாம் என மத்திய அரசு 2018-ம்ஆண்டு பிறப்பித்துள்ள அறிவிப்பாணையை நாங்கள் ரத்து செய்கிறோம்.

கடந்த 2014-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவி்ப்பாணையின்படி அனைத்து வாகனங்களும் 60 முதல் 100 கிமீ வேகத்துக்கு உட்பட்டு செல்லும் வகையில் மத்திய அரசு புதிதாக அறிவிப்பாணையை விரைவாக வெளியிட வேண்டும். இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும்போதே அவற்றில் வேகக் கட்டுப்பாட்டு கருவியைப் பொருத்த உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் அதிவேக இன்ஜின்களைக் கொண்டவை என்பதால்,இந்தியாவில் உள்ள சாலைகளின் தரத்துக்கேற்ப அவற்றின் வேகத்தையும் குறைக்க வேண்டும். இளம்வயதினர் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கும் வகையில் பள்ளிப் பாடத்திட்டங்களை வகுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் தெரிவித்தனர்.

இந்த உத்தரவு தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:

இந்தியாவில் வாகன விபத்துகளுக்கு சாலை விதிகள் குறித்த சரியான புரிதல்இல்லாததும், வாகனங்களின் அதிவேகமுமே காரணம். சட்டரீதியாக அனைத்து வாகனங்களிலும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.

விபத்து வழக்குகளில் சிக்கி உயிர்ப்பலி ஏற்பட்டால் போலீஸாரும் 304(ஏ)என வழக்குப்பதிவு செய்து தங்களதுபணியை எளிதில் முடித்துக் கொள்கின்றனர். அதற்கான ஆணிவேரை ஆராய்வதில்லை. இந்தியாவில் பெருகும் வாகனவிபத்துகளுக்கு கடிவாளம் போடுவது போல தற்போது சென்னை உயர் நீதிமன்றம், வாகனங்களி்ன் வேகத்தை குறைக்கவேண்டும் என மத்திய அரசுக்கு உத்தர விட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. எனவே பொதுமக்களின் நலன் சார்ந்து தகுந்த உத்தரவை மத்திய அரசு விரை வில் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x